கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமிக்கு இடையில் பல்வேறு பிரச்னைகள் உருவாகி வரும் நிலையில், பதவி ஆசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையை சாதகமாக்க பாஜக.,வும் முயன்று வருகிறது.
இதனிடையே, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில், குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் குமாரசாமி அரசுக்கு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 117 ஆகக் குறைந்துள்ளது.
கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது குமாரசாமிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. எனவே, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் விலகலால் குமாரசாமி அரசுக்கு ஆபத்தில்லை! இருப்பினும், இது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு சபலத்தைக் கொடுத்துள்ளது.