புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேர்படப் பேசு நிகழ்ச்சி நேற்றும் முன் தினமும் சிறப்பாக அமைந்திருந்தது. பொறுப்புணர்வோடு நடத்தப்பட்டது. நிறைய தகவல்கள் அளிக்கக் கூடியதாக இருந்தது. சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு அதில் விடையளிக்கப்பட்டன.
ஓர் உதாரணம்: அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று அரசு சொல்கிறதே என்ன ஆதாரம்?
அதற்கான பதில்: அது உளவு சொல்பவர்கள் (Human intelligence) கொடுத்த தகவல். அவர்களின் பெயர்களை வெளியிடலாமே? உளவு சொல்பவர் ஒருவரின் பெயரை வெளியிட்டால் பின்னர் அவரால் தகவல்கள் அளிக்க இயலாமல் போகும். அந்த உளவாளி நமக்குப் பயனற்றுப் போவார்
இந்த இரு இரவு நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள். வான் படை வீரர்கள். களத்திலே நின்று போர் செய்தவர்கள். அவர்கள் யாரும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் குறை சொல்லவில்லை. மாறாக ராணுவ வாய்ப்புக்கள் (Military Option) உட்பட எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொன்னார்கள்
ஆனால் புதிதாகப் பூத்திருக்கும் சில புத்தர்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு saynotowar என்று ஹேஷ்டாக் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்!
ராணுவ வீரர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி யோசிக்கிறார்கள். இந்த பு.பு (புதிய புத்தர்கள்) தங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி அஞ்சுகிறார்கள். இதுதான் வித்தியாசம்
சரி இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ போரை அறிவித்திருக்கிறதா? குறைந்த பட்சம் போர் நடத்துவோம் என்று எச்சரித்திருக்கிறதா?
இல்லை.
பின் ஏன் அவசர அவசரமாக இந்த ஹேஷ்டாக்?
அதற்குப் பின் அரசியல் இருக்கிறது.
நாம் பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்கினோமே?
அது போர் அல்ல. அது பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் (Counter terrorism) நாம். அவர்களது ராணுவ முகாம்களையோ, பொதுமக்களின் குடியிருப்புகளையோ தாக்கவில்லை.
பாகிஸ்தான் நம் எல்லைக்குள் வந்தார்களே, நம் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினார்களே?
நாம் பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து அவர்களது எல்லைக்குள் போனோம். அதை அழித்தோம். அவர்கள் இங்கு எதைக் குறி வைத்து வந்தார்கள்? இங்கு அவர்களின் இலக்கு என்ன? அதைப் பாகிஸ்தானால் சொல்ல முடியுமா? இங்கு எந்த பயங்கரவாத முகாமை நோக்கி வந்தார்கள்? நீங்கள் வந்தால் நாங்களும் வருவோம் என்ற வீம்புக்கு வந்தார்கள். அதுதான் சீண்டல். இந்த பு.புக்கள் அதைப் பற்றி ஏதேனும் கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?
பாகிஸ்தான் பிரதமர், பேசித் தீர்க்கலாம் என்கிறாரே?
உண்மையிலேயே அவருக்கு சமாதானத்தில் விருப்பம் இருக்குமானால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களை முடக்கியிருக்க வேண்டும். அதன் தலைவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபடசம் அவர்களது சிறையிலாவது அடைத்திருக்க வேண்டும். அப்படி அடைப்போம் என்று வாக்குறுதியாவது கொடுத்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு விஐபி அந்தஸ்து அளித்து பாதுகாப்பு கொடுக்கிறார். அப்படியிருக்கிறவரிடம் என்ன பேசுவது?
போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று ஒரு இரண்டாம் உலகப் போரில் தொடங்கி ஒரு பட்டியல் கொடுக்கிறாரே?
அவரது சரித்திரப் புத்தகத்தில் நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்று நினைக்கிறேன். 1971 போர் டிசம்பர் 3, 1971 அன்று தொடங்கி 16ஆம் தேதி முடிந்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணாகதி அடைந்தது. பாகிஸ்தான் தளபதி அமீர் அப்துல்கான் நியாசி சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1999 மே மாத மத்தியில் தொடங்கி ஜுலை 14 ஆம் தேதி முடிந்தது. யுத்தம் என்றால் அது ஆண்டுக்கணக்காக நீடிக்கும் என்று பூச்சி காட்டுகிறார். பாவம் அவர் என்ன செய்வார், போர் வந்தால் அவர் பதவி காலியாகிவிடும். நவாஸ் ஷெரீப்பை தூக்கி எறிந்து விட்டு முஷாரப் உடகார்ந்தது போல யாராவது ராணுவத் தளபதி அவர் நாற்காலியில் அமர்ந்து விடுவார்கள்
அது மட்டுமல்ல, பாகிஸ்தான் பலவீனமாக இருக்கிறது. அதனுடைய அந்நியச் செலாவணி கையிருப்பு, GDP,ராணுவ பலம் எல்லாம் நம்மைவிட பல மடங்கு குறைவு. அதற்கு அயல்நாடுகளின் ஆதரவும் கிடையாது. போர் வந்தால் தோல்வி நிச்சயம் என்பதைக் கடந்தகால வரலாறுகள் காட்டுகின்றன. எனவே இந்த புதிய புத்தர் சமாதானம் பேசுகிறார்
போர் வரவேண்டும் என்கிறீர்களா?
போர் வரவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் பாகிஸ்தான் ஊட்டி வளர்க்கும் பயங்கரவாதம் முற்றிலுமாக முடிவுக்கு வரவேண்டும் (once and for all) அதற்கு இந்தியா தனது முழு வலிமையையும் பயன்படுத்த வேண்டும். பொருளாதாரம், அயலுறவு, உளவு என்று எல்லா முனைகளிலும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை தேவை. அதை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அவற்றுடன் தேவையானால் ராணுவ வலிமையையும் பயன்படுத்த வேண்டும்.
பாகிஸ்தானுடன் நாம் நடத்திய போர்கள் எதுவும் நாம் தொடங்கியதல்ல. அது நம் மீது தொடுத்த எந்தப் போரிலும் நாம் தோற்றதில்லை.
போர் வர வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் போரைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை.
இன்று தேவை #saynotowar ஹேஷ்டாக் அல்ல. #Saynototerrorism ஹேஷ்டாக்தான்!
- மாலன் நாராயணன் (மூத்த ஊடகவியலாளர்)