தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாலத்தீவு, குமரி முனையை ஒட்டிய பகுதிகள் ஆகியவற்றில் மழை தீவிரமடையும்!
வரும் ஜூன் 5-ம் தேதி வரை தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த இரு நாட்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும், இடியுடன் கூடிய மழை பெய்யும்! அடுத்த இரு நாட்களில் மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்!
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்களில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும்!
அரபிக்கடலின் தென்மேற்கு பகுதி, வங்காள விரிகுடா கடலின் தென் மேற்கு பகுதி, அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்களா விரிகுடா கடல் பகுதி தென்கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.