இன்று வெளியாகும் தேவ் திரைப்படத்தில் வரும் ஒரு நூறு முறை கடந்து போன பாதை என்ற பாடல் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் பாடலாசிரியர் கவிஞர் தாமரை
அவரது அனுபவப் பகிர்வு.. இது..!
கார்த்தி நடித்த ‘தேவ்’ திரைப்படம் வெளியாகிறது. அதில் இடம் பெற்ற ‘அணங்கே சிணுங்கலாமா?’ என்கிற பாடலை ஏற்கெனவே பதிவிட்டிருந்தேன். இப்போது இன்னொரு பாடல். ‘ஒரு நூறு முறை வந்து போன பாதை’ ….
இயக்குநர் ரஜத் ரவிசங்கருக்கு இது முதல் படம். பயணப் பிரியர் !. தன் பயண அனுபவங்களுடன் சாகசங்களையும் இணைத்து கார்த்தியைக் கதாநாயகனாக்கிப் படம் பிடித்துக் கொண்டார். வேல்ராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை அள்ளியெடுத்து வந்திருக்கிறது.
இந்தப் பாடல் கூட பயணப் பாடல்தான். நாயகனுக்குக் காதல். நாயகிக்கு இன்னும் வரவில்லை. எப்போதும் விமானத்தில் பறக்கும் உயர் வர்க்கத்துப் பெண், இப்போது நாயகனுடன் ‘பைக்’கில் பயணம் செய்ய நேர்கிறது. இருவருக்குமான உரையாடல் பாடல் வடிவில் !.
படம் : தேவ்.
தயாரிப்பு : பிரின்ஸ் திரைநிறுவனம்.
பாடல் : ஒரு நூறு முறை…
இயக்கம் : ரஜத் இரவிசங்கர்.
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்.
பாடல் : தாமரை.
பாடகர்கள் : சத்யபிரகாஷ், சக்திஸ்ரீ
கோபாலன்.
நடிப்பு : கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங்
சூழல் : நீண்ட பைக் பயணம், காதல்
வந்த நாயகன், வராத நாயகி.
முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல் !.
( பாடல்வரிக் காணொலியில் தமிழ் வரிகளைக் காணவில்லை ???? ).
பல்லவி :
ஆ: ஒரு நூறு முறை
வந்து போன பாதை!
அட இன்று மட்டும்
ஏனோ இந்தப்
போதை..!
ஏன் என்று சொல்
கண்ணே….!
ஏன் வந்தேன் .. உன்
பின்னே..??!
நெடுந்தூரம் முன்னே
நீண்டு கொண்டே
செல்ல…
ஒரு வார்த்தையாலே
தூரத்தை நீ கொல்ல…
ஏதேனும் சொல்
பெண்ணே …!
நீ சொல்லும் சொல்
தேனே !.
அனுபல்லவி:
பெ: ஏன் என்னை… நீ
எடுத்தாய்… சிறை ?
தாமரைப் பூ
வருமோ… தரை ?
காற்றிலும்… நீ
செதுக்கும்…
கானல் சிலை !.
நெஞ்சுக்குள் நீ
நினைக்கும் அதை…
நான் சொல்ல
வேண்டுமென்றால்…
பிழை !.
வேறொன்றும்
தோன்றவில்லை…
நான் மழலை !
சரணம் 1:
பெ: நான் மழையினில்
நனைந்தது
இல்லை…
ஓ… மடுவினில்
குளித்தது
இல்லை…
நான் மரகத
மலைகளைப்
பார்க்க
என் கனவிலும்
வாய்த்தது
இல்லை…!
விலாவில் சிறகுகள்
கண்டேன்…
உலாவ உன்னுடன்
வந்தேன்….
எழுந்தேன்…!
விழுந்தேன்…!
கரைந்தேன்…!
சரணம் 2:
ஆ: நீ பறந்திடும்
உயரத்தில் இருந்து…
ஓ… பறவையின்
பார்வையில்
பார்த்தாய்…
ஆ…சிறு சிறு
உருவங்கள்
விரைந்து…
ஓ… நகர்வதை
எறும்பென
நினைத்தாய்..!
எல்லாமே நடக்குது
இன்று…
உனக்கும் பிடிக்குது
நன்று…!
பெ : மறந்தேன்…
எனை நான் …
இழந்தேன்…!
இறுதிப் பல்லவி :
பெ: இது போலே எந்த
நாளும் என்றும்
இல்லை !
இனி மேலும் வரும்
என்று
நம்பவில்லை… !
வான் எங்கும்
கார்மேகம் ..!
வா என்றால் நீர்
வார்க்கும்…
ஆ: ஒரு தோகை மயில்
தொற்றிக் கொண்ட
தோளில்…
மழை ஈரம் வந்து
சாரல் வீசும்
நாளில்…
ஏதேனும் சொல்
பெண்ணே ….
நீ சொல்லும் சொல்
தேனே..!
பெ: ஏன் என்னை… நீ
எடுத்தாய்… சிறை ?
தாமரைப் பூ
வருமோ… தரை ?
காற்றிலும்… நீ
செதுக்கும்…
கானல் சிலை..!.
ஆ: நெஞ்சுக்குள்ளே
நினைக்கும் அதை…
நீ சொல்லவில்லை
என்றால் பிழை !
போகட்டும் நம்பி
விட்டேன்
நீ… மழலை..!
காதலர் தினமாம் ????. நல்ல நாளில்தான் வெளியாகிறது. படத்தில் காதலும் காதல் சார்ந்த காட்சிகளும் நிறைய இடம் பெறுகின்றன. பார்த்து ரசியுங்கள்.