புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் 2வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி புதன் கிழமை நேற்று பிற்பகல் முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை முன் விடிய விடிய கறுப்புச் சட்டை அணிந்து தொடர்ந்து நடத்திய போராட்டம் 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு வந்த டிஜிபி சுந்தரி நந்தா, பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட முதல்வர் நாராயணசாமி மறுத்து விட்டார்.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்தால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு கருதி மத்திய அதிரடிப்படை மற்றும் தொழிற்பாதுகாப்பு படையினரை ஆளுநர் மாளிகையில் குவிக்க ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்நிலையில், துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த கிரண்பேடி, அவசரமாக தில்லி புறப்பட்டுச் சென்றார்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிரண்பேடி திடீர் பயணம் பரபரப்பை கூட்டியுள்ளது. அதிவிரைவுப்படை வீரர்கள் பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறி தில்லி சென்றதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தீவிரமாக யோசிக்கப் பட்டு வருகிறது.
மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயன்ற காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே, தில்லியில் மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையேயான பிரச்னை குறித்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால், 3வது நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பாரதிய ஜனதா கட்சியினர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப் பட்டனர்.
முதல்வர் நாராயணசாமி போராட்டத்தால் புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் தர்ணாவில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை உதாசீனப்படுத்திவிட்டு ஆளுநர் மாளிகையை விட்டு கிரண்பேடி வெளியே சென்றது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்.
இலவச அரிசி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தால் போராட்டத்தை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார் நாராயணசாமி.
இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமியின் போராட்டம் வெற்றி பெற திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் 2வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.புதுச்சேரி : புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன் 2வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.