கீழ்வேளூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது ஒவ்வோராண்டும் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு பரிசு பெறுவது என் வழக்கமாக இருந்தது. அதேபோல் எட்டாம் வகுப்பில் 1970ல் கட்டுரைப் போட்டியில் ராஜாஜியின் வியாசர் விருந்து முதல் பரிசாகக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்றும் என் மதிப்பிற்கும் விருப்பத்திற்கும் உரிய நூலாக என் புத்தக அலமாரியில் இடம்பெற்றுள்ளது.
டிவியில் மகாபாரதம் பார்த்த அனுபவமும் சிறப்பான தருணங்கள்.
மதுரமுரளி தெலுங்கு மாத இதழில் பீஷ்மர் குறித்து தொடராக எழுதும்படி அவர்கள் கேட்டபோதுதான் முதலில் இணைய தேடல் வழியே திரு கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பான மகாபாரதத்தை படிக்கத் தொடங்கினேன். அந்தத் தேடல் பின்னர் திரு அருட் செல்வப்பேரரசன் அவர்களின் தமிழ் மகாபாரத மொழிபெயர்ப்பின் பக்கம் ஆற்றுப்படுத்தியது.
வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களாக இவற்றை மதிப்பிடுகிறேன்.
திரு அருட்செல்வப் பேரரசனின் இந்த சேவை எந்த அளவுகோலின் அளவைக்கும் எட்டாதது.
அனைவருக்கும் சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது.
அவரே அதன் முன்னுரையில் கூறியுள்ளது போல….
“ஏன் பழைய பஞ்சாங்கங்களைச் சொல்லி மீண்டும் மக்களை மூடர்களாக்கப் பார்க்கிறாய்?” என்றும், “உனக்குச் சம்ஸ்கிருதம் தெரியுமா? தெரியாதென்றால் நீ ஏன் மொழிபெயர்க்கிறாய்?” என்றும் இருதரப்புகளிலும் கேள்விகளும், தேவையற்ற வேறு கேள்விகளும் மீண்டும் மீண்டும் வந்தன” – என்பதுபோன்ற சலிப்பூட்டும் எதிர்மறை விமர்சனங்களை பொருட்படுத்தாது முன்னேறியுள்ளார். பாராட்டுக்குரிய இந்த முயற்சியில் திரு ஜெயமோகன் அவர்கள் அளித்த உற்சாகத்தையும் திரு அருட்செல்வப் பேரரசன் நன்றியோடு குறிப்பிட்டுகிறார்.
தற்போது 16,000 பக்கங்களோடு முழு மகாபாரதத்தினை நிறைவு செய்துள்ளார்.
அவர் தெரிவித்து உள்ளபடி…
“03.01.2013-ல் தொடங்கிய இந்த மொழிபெயர்ப்புப் பணி 14.01.2020-ல் நிறைவடைந்தது. 2568 நாட்கள், அஃதாவது ஏழு வருடங்களும், பனிரெண்டு நாட்களும் ஆகியிருக்கின்றன. மொத்தம் உள்ள 18 பர்வங்களில் 100 உபபர்வங்கள், 2116 அத்யாயங்கள், கிட்டத்தட்ட 86,000 ஸ்லோகங்களை உள்ளடக்கியது மஹாபாரதம். ஆற்றின் உயிரோட்டம் போலவே, மஹாபாரதமும் தன்னளவில் உயிரோட்டம் கொண்டது என்று கருதுகிறேன். மொழிபெயர்ப்பை நாம் செய்யவில்லை. மஹாபாரதம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது என்ற எண்ணமே இந்த ஏழு வருடங்களும் என் மனத்தை நிறைத்திருந்தது”.
இந்த நூலை ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி இந்தியாவின் மகத்தான இதிகாசமான மகாபாரதம் பற்றி அறிய விரும்புபவர்கள் அனைவருமே நிச்சயமாக படித்துப் பயனுற வேண்டும் .இதற்கென அவர் வைத்துள்ள பேஸ்புக் பக்கம் https://www.facebook.com/tamilmahabharatham
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62