கடந்த வருடம் போல் இந்த வருடமும் கெடுபிடிகளை வைக்குமா காவல்துறை என்ற கேள்வி இந்து இயக்கங்களுக்கு இடையே எழுந்தது. ஆனால், விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகளை காவல்துறை எளிமைப்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர்.
கடந்த வருடம், எப்போதும் இல்லாத வகையில் கடுமையான விதிகளைப் போட்டது தமிழக அரசு. நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவாகின. அதன்படி, பல்வேறு கட்ட அனுமதிகள், பல துறைகளிடம் இருந்து தடையில்லாச் சான்று, குறிப்பாக தீயணைப்புத் துறையிடம் இருந்தும் இத்தகைய சான்று பெறல் என ஒரு விநாயகர் சிலையை வைப்பதற்குள் அந்தப் பகுதி இந்து இயக்கத்தினர் பட்ட பாடு பெரும்பாடாகத்தான் இருந்தது. அவ்வளவு கெடுபிடிகள்!
ஆனால் இந்த முறை, விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பவர்களுக்கு அனுமதி வழங்க ஒற்றைச்சாளர முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.
சிலை வைக்க விரும்புவர்கள் இனி தனித்தனியாக ஒவ்வொரு துறையிடமும் சென்று அனுமதி வாங்க தேவையில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் பொறுப்பு அதிகாரியாக ஒருவரை நியமனம் செய்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 12 காவல் மாவட்டங்களுக்கும் 12 காவல் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக மாநகர காவல்துறை நியமித்துள்ளது.
எனவே இந்த வருடம், கடந்த காலத்தைப் போல் தேவையற்ற கெடுபிடிகள் விதிக்கப் பட மாட்டாது என்று இந்து இயக்கங்கள், விநாயகர் சிலை கமிட்டிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்