நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரன் ஆதரித்து களக்காடு பகுதிகளில் கனிமொழி எம்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்! முன்னதாக அவர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து களக்காட்டில் திமுக கூட்டணி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இதனிடையே, தற்போது திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றன.
இந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளன.
முன்னதாக, இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 40 பேர் கொண்ட பேச்சாளர் பட்டியலும், அங்கீகாரமில்லாத கட்சிகள் சார்பில் 20 பேர் கொண்ட பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளன.
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர்கள் எம்பிக்கள் முன்னாள் அமைச்சர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.
திமுக பட்டியலில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பொருளாளர் துரைமுருகன் கனிமொழி உதயநிதி எம்பி எம்எல்ஏக்கள் என சிலர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் வழங்கியுள்ள பட்டியலில் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், செயல் தலைவர் முன்னாள் தலைவர்கள் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது! எனவே, அவர் நாங்குனேரி பிரசாரத்துக்கு வருவாரா என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.