சென்னையில் மீண்டும் மாஞ்சாநூல் அறுத்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து கோபால் என்பவரின் 3வயது மகன் அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் நடந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் வயது 25. இவர் மருந்துகளை விற்கும் பிரதிநிதியாக உள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கன்னிகாரபுரம் மாநகராட்சி திடல் அருகே வந்த போது ராஜசேகரனின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது. இதனால் சுதாரித்த அவர் ஒரு கையால் மாஞ்சாநூலை பிடித்து வண்டியை ஓரமாக நிறுத்தினார். கழுத்து அறுபடுவது தாமதாகிய நிலையிலும் அவரது கழுத்தில் இரத்தம் வந்தது.
இதனையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த புளியதோப்பு காவல்துறை, காற்றாடி விட்ட 12 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.