திருவண்ணாமலை: குழந்தைகள் கடத்தப் படுவதாக வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரவ விட்டவர் கைது செய்யப் பட்டார்.
20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளி மாநில கும்பல் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.
இது குறித்து அறிய வந்ததும், விசாரணை மேற்கொண்ட அனக்காவூர்புதூர் போலீசார் வீரராகவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர்தான், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஒரு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மூதாட்டி ருக்மிணி மற்றும் அவருடன் வந்த சிலரை, குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்று கூறி பொது மக்கள் தாக்கினர். இதில், ருக்மிணி உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். காரணம், வட மாநிலத்தவர் சிலர் இதனால் தாங்கள் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் வெளியில் வர பயந்து போல் இருப்பதாகக் கூறினர். இந்நிலையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.