சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.
சென்னையில் நடந்த பேரணிக்கு எந்தக் காரணமும் இல்லை; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடந்தது எனக் கூறியுள்ளார் அழகிரி.
திமுக., தலைவராக அறிவிக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி இன்று பேரணியாகச் சென்றார்.
இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே துவங்கிய இந்தப் பேரணியில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்தபடி பங்கேற்றனர். பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்தப் பேரணிக்காக, சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்ற மு.க.அழகிரி, கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன், மகள் உள்பட ஆதரவாளர்கள் பலரும் சென்றனர்.
இந்தப் பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கலைஞர் மறைந்த 30வது நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் விசுவாசிகள், பொதுமக்கள், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
பேரணிக்கு ஒத்துழைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக் கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த டிவி, பத்திரிகையாளர்கள், நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பேரணிக்கு எந்தவிதக் காரணமுமில்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே வந்தோம். பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று கேள்வி எழுப்பினார் மு.க.அழகிரி!
அழகிரியின் திமுக அமைதிப் பேரணியில் கூட்ட நெரிசலில் கம்பம் திமுக முன்னாள் சேர்மன் இளங்கோவன் மயக்கம் அடைந்தார். அது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.