சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக, பாமக., பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இந்தப் பொதுக் கூட்டத்துக்காக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில், பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் படம் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக., தலைவர் விஜயகாந்த் படமும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் படமும் இடம்பெற்றுள்ளதால், அ.தி.மு.க- தே.மு..தி.க கூட்டணி உறுதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது.
எந்தக் கூட்டணியிலும் உடனே சேராமல், வழக்கம் போல் கடைசிக் கட்டம் வரை இழுத்துக் கொண்டிருந்த தேமுதிக.,வுக்கு பதிலடியாக திமுக., உடனே கூட்டணியை நிறைவு செய்து இனி கதவுகள் மூடி விட்டன என்று அறிவித்தது.
இதனால் தே.மு.தி.க.வுக்கான தி.மு.க. கூட்டணி வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், தேர்தல் பணியாற்றுவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாம். ஆனால், கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிமுக. கூட்டணியில் குறைந்தபட்சம் 7 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக உறுதியாக நிற்கிறது. ஆனால் அதிமுக.,வோ, 4 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்குவதாகக் கூறுகிறது.
இந்நிலையில், விஜயகாந்த் இன்று காலை கட்சி அலுவலகம் வந்து, கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிகள் குறித்தும், எண்ணிக்கை குறித்தும் பேசப்பட்டது.
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் என்றும், அவற்றில் 2 தனித் தொகுதிகள் என்றும் கூறப் பட்டதால், தனித்தொகுதிகளை ஏற்க தேமுதிக தயங்கியது. மேலும், பாமக வலுவாக உள்ள தொகுதிகளை ஏற்பதையும் தேமுதிக., தவிர்த்து வருகிறதாம்.
இந்நிலையில், தங்களுக்கு 4 தொகுதிகள்தான் என்றால் கூட்டணியே வேண்டாம் என்று கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கொடுக்கும் 4 தொகுதிகளை பெறுவதை விட தனித்தே நிற்கலாம் என சில நிர்வாகிகள் கூறினராம்.
நீலகிரி , தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா தொகுதிகளில் ஒன்று என தேமுதிக.,வுக்கு ஒதுக்கீடு செய்யப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதால், தங்களுக்கு இந்தத் தொகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்று கருதுகிறது தேமுதிக.,!.
எனவே, தனித்துப் போட்டியிடலாம் அல்லது, தினகரன் கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்றும் பேச்சுக்கள் நடந்ததாகக் கூறப் படுகிறது.
இருப்பினும், விஜயகாந்த் படம் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் வரிசையில் மேடையில் இடம்பெற்றுவிட்டது. கூடவே ஜிகே வாசன் படமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.