இந்தியாவில் முதன் முறையாக சென்னைக் காவல்துறையினரின் நுண்ணிய நல்முயற்சியாக, சென்னையில் சாலையில் ஒளிரும் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப் பட்டு வருகின்றன.
போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாலையில் ஒவ்வொரு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் அவற்றைக் கவனிக்க இயலாமல் போவதும், சில நேரங்களில் கவனித்தும் விதிமுறைகளை மீறிச் செல்வதும் நடைபெறுகிறது.
இவற்றைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை மதிக்கவும் சென்னைக் காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது புது முயற்சியாக சிக்னல் கம்பங்களின் கீழே நிறுத்தக் கோட்டை வாகன ஓட்டிகளின் கண்களுக்குத் தெரியுமாறு சாலையிலேயே சிவப்பு, வெள்ளை, நீல வண்ணங்கள் மாற்றி மாற்றி ஒளிருமாறு விளக்குகள் பொருத்தியுள்ளனர்.
சிக்னல் கம்பங்களைக் கவனிக்கத் தவறும் ஓட்டிகளின் கண்களில்கூட சாலையில் ஒளிரும் இந்த சிக்னல் விளக்குகள் படாமல் போகாது என்பதால் இத்தகைய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்பு காரணமாக வாகன ஓட்டிகள் சாலையின் நடுவில் ஒளிரும் இந்த விளக்குகளைப் பார்த்து வாகனத்தை அதற்கேற்ப கட்டுப்படுத்தமுடியும்.
வெளிநாடுகளில் இதுபோன்ற போக்குவரத்து விளக்கு ஏற்பாடுகள் உள்ளன. அவை, இந்தியாவில் அதிலும் சென்னையில் செய்யப்பட்டுள்ளன.
தற்போது சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கு, பல்வேறு இடங்களில் உள்ள சிக்னல்கள், யூ டர்ன் எனப்படும் வளைவு, ஸ்பீட் பிரேக்கர்கள் ஆகிய இடங்களிலும் பொறுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.