காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் யோகிபாபுவின் திருமணம் திருத்தணி அருகேயுள்ள அவரது குலதெய்வ கோயிலில் இன்று காலை நடைபெற்றது.
மஞ்சு பார்கவி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சபிதாராய் என்கிற நடிகைக்கும், யோகிபாபுவிற்கும் திருமணம் எனத் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு யோகிபாபு மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் திருமணம் நடக்கும்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் எனவும் யோகிபாபு கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை யோகிபாபு திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். யோகிபாபுவிற்கு சினிமாத் துறையினர், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது காக்டெயில் என்ற படத்தில் யோகி பாபு, தமிழ் ஹிந்துக்களின் புனித தெய்வமாகவும் தமிழர் கடவுளாகவும் குறிஞ்சித் தெய்வமாகவும் போற்றப் படும் முருகப் பெருமானின் வேடத்தில் கையில் வேல்வைத்துக் கொண்டு, மோசமான சித்திரிப்புடன் போஸ்டரில் இடம் பெற்றிருந்தார். இதற்காக ஹிந்து தமிழர் இயக்கங்கள் அவர் மீது புகார் கூறி வந்தன. இந்த நிலையில், தனது குலதெய்வம் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார் யோகிபாபு.