தமிழகம், புதுவையில் அமைந்துள்ள திமுக., கூட்டணியில், காங்கிரசுக்கு புதுவை உள்பட பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் படவுள்ள நிலையில், அதற்கு முன்னரே கூட்டணியை இறுதி செய்வதில் அனைத்து கட்சிகளுமே மும்முரமாக ஈடுபட்டன.
தமிழகத்தில் நேற்றே முந்திக் கொண்டு பாஜக., பாமக., அதிமுக., கூட்டணி அறிவிப்பை வெளியிட்டன. இந்நிலையில் திமுக., குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே திமுக., காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற சூழல் இருந்ததால், இம்முறை எத்தனை தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி இருந்தது.
இந்நிலையில் இன்று திமுகவும், காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டை அறிவித்தன. இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க, காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் தில்லியில் இருந்து இன்று மாலை சென்னை வந்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இருவரும் ஆலோசித்தனர். பின்னர் அனைவரும் அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து ஸ்டாலின் அறிவித்தார். இதில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் சேர்த்து பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதே போல கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து திமுக விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.