பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களைப் பெற வேண்டாம் என்று திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
திடீரென்று பத்து ரூபாய் நாணயம் பெற வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை மேலாளர் ஒருவரே அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ரிசர்வ் வங்கி செல்லாது என அறிவித்ததாகத் தகவல் இல்லாத நிலையில் இப்படி ஒரு அரசு சார்ந்த துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது என்று பலரும் திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
அந்த சுற்றறிக்கையில்… “நடத்துனர்களின் கவனத்திற்கு… நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும்போது பயணிகள் கொடுக்கும் பத்து ரூபாய் நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும்! தவறும் பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும்! வசூல் தொகை செலுத்தும் போது பத்து ரூபாய் நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் அனைத்து நடத்துனர்களும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் கழகத்தின் கிளை மேலாளர் கையொப்பமிட்டு இருபத்தி ஒன்றாம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது! இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன!
ஏற்கனவே 10 ரூபாய் நாணயம் விவகாரத்தில் வணிகர்கள் பலரும் வாங்காமல் தவிர்த்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும் அதை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது!
இந்த நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த கிளை மேலாளர் ஒருவர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் தவிருங்கள் என்று கூறியிருப்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை மதிக்காமல் உதாசீனம் செய்வது போன்றதாகும் என்று கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.