தன்னிடம் டியூஷன் படிக்கவில்லை என்ற காரணத்தால், கணக்கு வாத்தியார் கொடுமைப் படுத்தினார் என்று கூறி கடிதம் எழுதிவைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளான் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன்.
“என் சாவுக்கு காரணம் ரவி.. ரொம்ப கொடுமை செஞ்சான்.. ரத்த கண்ணீரை வரவழைச்ச அவனுக்கு தண்டனை வாங்கி தரணும்” என்று தனது நோட்டுப் புத்தகத்தில் 10-ம் வகுப்பு மாணவன் லட்டர் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கியுள்ளது மதுரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கணூரைச் சேர்ந்த மாணவன் பாலாஜி, உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான். இவனது வகுப்பில் கணக்குப் பாடம் எடுத்து வந்த ஆசிரியர் ரவி, தனியாக டியூஷனும் நடத்தி வருகிறாராம். மாணவன் பாலாஜி 9ஆம் வகுப்பு படித்தபோது இவரிடம்தான் டியூஷன் படித்தானாம். ஆனால், தான் பத்தாம் வகுப்பு வந்ததும், வேறு இடத்துக்கு டியூஷன் சென்றுள்ளான். இது ஆசிரியர் ரவிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.
இதனால், அவர் மாணவன் பாலாஜியை திட்டித் தீர்ப்பாராம். அளவுக்கு அதிகமாக வகுப்பில் அத்தனை பேர் முன்னிலையிலும் வெறுப்பை அதிகமாக உமிழ்வாராம். காரணம் இல்லாமல் அடிக்கடி அடித்தும் வைப்பாராம். இதனால் மனம் வெறுத்த மாணவன் பாலாஜி, தனது பெற்றோரிடம் இதனைச் சொல்லி அழுது புலம்பியுள்ளான். ஆனால் பெற்றோரும் தன் மகனை சமாதானப் படுத்தி, எல்லாம் சரியாகிவிடும், ஒரு வருடம் பொறுத்துக் கொள் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பாலாஜியை ரவி மிக மோசமாக திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்ததில் இருந்து மன அழுத்தத்தில் இருந்துள்ளான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் அவன் வீட்டில் விசாரணை செய்தனர். அப்போது அவனது நோட்டு புத்தகத்தில் ஒரு பக்கத்தில் தனது மரணத்துக்குக் காரணம் ரவி என்று மாணவன் பாலாஜி எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
‘என் சாவுக்கு காரணம் ரவி. என்னை ரொம்பவும் கொடுமை செய்தான். அவனுக்கு தண்டனை தர வேண்டும். முக்கியமாக என் ரத்த கண்ணீருக்கு காரணமான ரவிக்கு தண்டனை தர வேண்டும்.. நண்பனுக்கும், பெற்றோருக்கும் இறுதி வணக்கம்’ என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தக் கடிதத்தின் தன்மை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கையெழுத்து மாணவன் பாலாஜி உடையதுதானா என்று விசாரணை நடத்தி வருகின்ற்னார். இதனிடையே, ஆசிரியர் ரவி தலைமறைவாகி விட்டதால், இந்தச் சம்பவத்தில் சந்தேகம் வலுத்துள்ளது. போலீஸார் ரவியைத் தேடி வருகின்றனர்.