அவசர பத்திரிகையாளர் சந்திப்பு என்று குறிப்பிட்டு, இந்தச் செய்தி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
இன்று மதியம் 2.30 மணிக்கு முன்னாள் தமிழக அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு வக்ஃப் போர்ட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளார். பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும். இடம் : தமிழ்நாடு வக்ஃப் வாரியம், மண்ணடி, சென்னை – 1. – என்பது அனுப்பப் பட்ட செய்தி.
முன்னதாக, அதிமுக., எம்பி., அன்வர் ராஜா, தனக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி கிடைக்காது என்று தகவல் பெறப்பட்டதால், அங்கே போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலையில், அதிமுக.,வை விட்டு விலகுவார் என்று கூறப் பட்டது.
அதே நேரம், பாஜக.,வுடன் அதிமுக., கூட்டணி வைத்துள்ளதால், அந்தக் காரணத்தைச் சொல்லியே அவர் அதிமுக.,வில் இருந்து விலகுவார் என்றும், அதன் பின்னர் அவர் காங்கிரஸில் சேருவார் என்றும் கூறப்பட்டது.
காங்கிரஸில் சேர்ந்தாலும், ஏற்கெனவே திமுக., கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு நிற்பதாகவும், அதனால், காங்கிரஸில் சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தாலும் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் உலாவருகின்றன.
ஏற்கெனவே அன்வர் ராஜாவும், கரூர் தம்பிதுரையும் தான் பாஜக., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். அன்வர் ராஜா ஒரு படி மேலே போய், அதிமுக., சிலபஸில் இல்லாத பாடங்களை எல்லாம் மக்களவையில் முத்தலாக் விவகாரத்தின் போது எடுத்து அளந்து விட்டார். இது அதிமுக.,வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும், ராமநாதபுரம் நிகழ்ந்த கலவரங்கள், மத மோதல்களில் ஹிந்து இயக்கப் பிரமுகர்கள், பாஜக.,வினர் மீது கடும் எதிர்ப்பையும் தெரிவித்து, ஒடுக்குவதற்கான முயற்சிகளிலும் அன்வர் ராஜா ஈடுபட்டார் என்று பாஜக.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கூட்டணி என்று வரும்போது, அன்வர் ராஜாவுக்கு இந்து இயக்கங்களில் ஆதரவு கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. அதிமுக., பாஜக.,வுடன் கூட்டணி சேர்ந்ததால், சிறுபான்மைக்கு எதிரான போக்கு என்று பிரசாரம் செய்யவும், அதனால்தான் தாம் வெளியேறியதாகவும் அன்வர் ராஜா சொல்லக் கூடும் என்பதால், செய்தியாளர்கள் பரபரப்பாகி வருகின்றனர்.