பாபநாசம்: நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு பாபநாசத்துக்கு இன்று காலை வந்திருந்தார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசத்தில்
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நதியில் நடைபெறும் மகா புஷ்கர விழா, இந்த ஆண்டு தாமிரபரணி மகாபுஷ்கரமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் தாமிரபரணி நதியில் நீராடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாபநாசத்திற்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்… நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞர்கள் விவசாயிகள் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்வதற்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
அவர் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்; பயப்படுகின்றனர்.
பிறப்பால் நான் கிறிஸ்தவன். இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றி பல ஆண்டுகளாக ஆன்மீக ரீதியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்திருகிறேன்.
நடிகர் விஜய்யின் தந்தை என்பதை விடவும் நடிகர் என்பதை விடவும் ஒரு தமிழ் பிரஜையாக அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விருப்பப் படுகிறேன். என்னை ஆன்மீகவாதியாக மாற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவ் என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அண்மைக் காலமாக மக்களிடம் இந்து மத எழுச்சி ஏற்பட்டு வருகிறது. பலமுனைத் தாக்குதல்களால் சோர்வுற்ற பலரும் இப்போது இந்து மதத்தைப் பின்பற்றும் எங்களுக்கும் உரிமை உண்டு என்று எதிர்க்கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கின்றனர். தனது திரைப்படங்களில் ஹிந்து மதத்தை இழிவு படுத்தி காட்சிகள் வைத்தும், பொது மேடைகளில் பேசியும், ஹிந்து மத விரோதத்தை சம்பாதித்துள்ளார் கிறிஸ்துவரான எஸ்.ஏ.சந்திரசேகர்.
மேலும், தன் மகன் விஜய் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் எஸ்.ஏ.சந்திரசேகர், அதற்கு தனது இந்து மத எதிர்ப்புக் களன் தடையாக இருக்கக் கூடாது என்று எண்ணுகிறார். அதனால் இப்போது இயக்குனராக இருந்தவர் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் மட்டத்தில்.
சன் பிக்சர்ஸுடன் கைகோத்து விஜய் நகர்த்தும் அரசியல் நடவடிக்கையால், திமுக., தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. முதலில் மு.க.ஸ்டாலின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், தொடர்ந்து அவர் மகன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று காய் நகர்த்தி, சினிமா துறையில் இறக்கிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வரும் போது, நடிகர் விஜய்யின் அரசியலும், சன் குழுமத்தின் ஆதரவும், திமுக., தரப்புக்குள் குடும்ப மோதலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப் படுகிறது!
இத்தகைய சூழலில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர், ஹிந்துக்கள் புனித சடங்காகப் போற்றி வரும் புஷ்கர நீராடலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கூறுகிறார்கள்.