நடிகர் கமலஹாசன் கரூர் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் ஆனதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆயினும் கமல் செய்தியாளர்களை புறக்கணிக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே“என்றார்.
கமலின் இந்த பேச்சு நாடுமுழுவதும் சர்ச்சையானது. கமலுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தினர். கமலின் கருத்துக்கு அரசியல் தலைவர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.
திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது. இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல் ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த நீதிமன்றம், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது நீதிமன்றம். கரூர் நீதிமன்றம் ஜெ.எம் 2 ல் (குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ல்) நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் ஆஜராகி கமல் நிபந்தனை முன்ஜாமீனை பெற்றுக்கொள்ளலாம் என்றும், 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையை செலுத்தி இருநபர் உத்தரவாதத்துடன் கமல் முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 20 ம் தேதி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ல் நடிகரும், மக்கள் நீதிமையத்தின் தலைவருமான கமலஹாசன் இன்று ஆஜரானார், இதற்காக இந்து முன்னணி நிர்வாகிகள் எவரும் எதிர்ப்பு கோஷம் எழுப்பாமல் இருக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தியாளர்கள் நீதிமன்றத்தின் முன்பு செய்தி சேகரிக்க காலை 10 மணியிலிருந்து குவிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில், நடிகர் கமலஹாசன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சொகுசு கார் மூலம் கரூர் வந்தடைந்தார். பின்பு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு சுமார் 3 மணி அளவில் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ல் நிறுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தின் முன்புறம் வராமல், பின்புறம் வழியாக வந்த நடிகர் கமல், அதே பின்புறம் வழியாக வெளியே சென்றார்.
பத்திரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் செல்ல இருந்த கமலஹாசன் வருகையை அவரது கருப்பு நிற சொகுசு கார் காட்டிக் கொடுத்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற ஆணையின் படி, நேர்நிறுத்தப்பட்ட கமலுக்கு, இருவர் ரூ 10 ஆயிரத்துடன் கூடிய உத்தரவாதம் அளிக்க, அதன் பின் பிணையில் வெளியே வந்தார்.
நடிகர் கமலஹாசனிடம் செய்தியாளர்கள் பேட்டி அளிக்குமாறு கேட்டதற்கு, நீண்ட நேரம் யோசித்த கமல் ஒன்றும் சொல்லாமல் அப்படியே காரில் ஏறிச் சென்றார். அப்போது நிருபர்கள் ஏன் சார் செய்தியாளர்களை புறக்கணிக்கின்றீர்கள் என்றதற்கு, நான் அவாய்டு செய்யவில்லை என்று கூறியவாறே, காரில் ஏறி புறப்பட்டார்.
பின்னர் இது குறித்து அவரது வழக்கறிஞர் விஜய் என்பவர் கூறுகையில், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமலஹாசன், நீதிமன்றத்தில் நீதிபதி விஜய் கார்த்திக் முன்பு நேர்நிறுத்தப்பட்டார் என்றார்.
மேலும், நீதிபதிகள் சென்று வரும் வழியாகவே சென்று அவ்வாறாகவே வெளியில் சென்றாரே நடிகர் கமலஹாசன்! ஏன் அவ்வாறு? என்று செய்தியாளர்கள் கேட்க, மக்கள் செல்லும் பாதையின் வழியாகத் தான் அவர் சென்றார் என்று கூறினார் வழக்கறிஞர் விஜய்!