ஜூலை 6 இன்று
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா பிறந்தநாள்
ஜூலை 6, 1930 – நவம்பர் 22, 2016.
கர்நாடக சங்கீத இசைக் கலைஞர், வயலின் வித்வான், வாக்கேயக்காரர், திரைப்பட இசையமைப்பாளர், திரையிசை பாடகர். உலக அளவில் 25 ஆயிரத்திற்கும் மேலாக கச்சேரிகள் செய்துள்ளார். மிகச்சிறிய எட்டு வயதிலேயே கச்சேரி செய்து பால மேதாவியாக பெயர் பெற்றார். வயலின் மிருதங்கம் கஞ்சிரா போன்ற வாத்தியங்களை மிகச் சிறப்பாக வாசித்தார்.
பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பத்மபூஷன், டாக்டரேட் பட்டங்கள் பெற்றுள்ளார். சென்னையில் தன் இல்லத்தில் நவம்பர் 22, 2016 ல் மதியம் உணவின் பிறகு தூக்கத்திலேயே அனாயாச மரணம் அடைந்தார்.
‘ஐயோ! இந்த குழந்தை பிறக்காவிட்டால் நம் சூரீடு நமக்கு கிடைத்திருப்பாளே!’ என்று உடனிருந்தவர்கள் வேதனைப்படும் படியாக தாயை விழுங்கிய பிள்ளையாக , பிறந்த பதினாறாவது நாளில் அவருடைய தாயார் சூரியகாந்தம் மரணமடைந்தார்.
சூரீடு என்றழைக்கப்பட்ட சூரியகாந்தம்மா குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு தன் அக்கா சுப்பம்மாவிடம், ‘எனக்கு பிரசவமான பின் குழந்தையை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் வீணை சாதனை தடை படும் அல்லவா. அதனால் என் குழந்தையின் பொறுப்பு உனக்கே’ என்று கூறினார்.
ஏதோ சங்கீதத்தின் மீது உள்ள ஆசையால் இப்படி கூறுகிறாள் தங்கை… குழந்தை பிறந்த பின் உண்மையாகவே குழந்தையை பார்த்த பின்பு குழந்தை மீது உள்ள பாசம் போகுமா என்று விளையாட்டாக நினைத்துக் கொண்டார் அவர் அக்கா சுப்பம்மா.
ஆனால் குழந்தை பிறந்த 16-வது நாளில் மரணமடைந்த சூரியகாந்தம்மாவின் குழந்தையை இறைவன் அளித்த பொறுப்பாக ஏற்று வளர்க்கத் தொடங்கினார். தேவகியின் குழந்தையை யசோதை வளர்த்தது போல திருமணமாகி சில நாட்களிலேயே கணவனை இழந்த சுப்பம்மா, தாயை இழந்த
பச்சைக் குழந்தையை வளர்க்கத் தொடங்கினார்.
அந்தக் குழந்தை வளர்ந்து வளர்ந்து யாரும் எட்ட முடியாத உயர்ந்த சிகரத்தை எட்டி சங்கீதத்தில் ஒரு துருவ நட்சத்திரமாக விளங்கினார். கான சுதாகர, வாகேயகாரபூஷணா டாக்டர் மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா ஆனார்.
பாலமுரளியின் தந்தை பட்டாபிராம் சீடர்களுக்கு சங்கீதம் கூறுகையில் குழந்தை சிரத்தையாக அதையெல்லாம் கேட்பார். விளையாட்டு பொம்மைகள் எத்தனை இருந்தாலும் அவற்றை விளையாடாமல் தந்தையோடு சேர்ந்து தம்புரா பிடில் வாசிப்பதற்கு அமர்ந்து கொள்வார்.
சாப்பிடுவதற்கு பிடிவாதம் பிடித்தால் அங்குள்ள மாணவர்களில் யாரையாவது வர்ணமோ ஸ்வர-ஜதையோ பாடும்படி செய்தால் உடனே பிடிவாதத்தை விட்டு சொன்னபடி கேட்பார். சிறிது சிறிதாக பாலமுரளிக்கு சங்கீத பாடங்கள் எல்லாம் குரலில் ஏறத் தொடங்கின.
பாலமுரளியை வளர்த்து அவருடைய முன்னேற்றத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து தங்கையின் ருண ஏக்கம் தீர்த்த பெரியம்மா சுப்பம்மா மன நிறைவுடன் 1965ல் காலமானார்.