ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை அதிமுக சட்டமன்றக் குழு குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.
துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் தற்போது நிலவி வரும் அதிகார மோதலினால் புதுச்சேரியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
துணைநிலை ஆளுநர் செயல்படும் விதம் சர்வாதிகார போக்காகவும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அதிமுக., உறுப்பினர்கள், கிரண்பேடி சுய விளம்பரம் தேடுவதற்காக ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலும் உதாசீனம் செய்து மாண்பை அவமதிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய துணை ராணுவப் படையை அழைத்து, மக்கள் மத்தியில் பயத்தையும், பீதியையும் உருவாக்கியுள்ளார் என்றும், கிரண்பேடி தொடர்ந்து புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணியாற்றினால் மத்திய அரசின் நற்பெயர் கெடும் என்றும் எம்.எல்.ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், அசானா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.