இந்திய மண்ணில் பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை; பயங்கரவாதிகளை எதிர்கொள்ள புதிய கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, பதிலடி கொடுத்திருக்க வேண்டும்!
இந்தியாவில் முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்பு, மற்றும் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு இருந்த போதும், முந்தைய காங்கிரஸ் அரசு என்ன செய்தது?. உள்துறை அமைச்சரை மட்டுமே காங்கிரஸ் அரசு அப்போது மாற்றியது!
இத்தகைய சூழ்நிலையில், உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டுமா அல்லது கொள்கையை மாற்ற வேண்டுமா? நாங்கள் கொள்கையை மாற்றினோம்!
யூரி தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலைப் போன்று இந்தியா பதிலடி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் முன்னேற்பாடுகளுடன் எல்லையில் படைகளைக் குவித்து தயார் நிலையில் வைத்திருந்தது. ஆனால் இந்த முறை விமானப் படை மூலம் பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அதிகாலை 3.30க்கு நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் தூக்கம் தொலைந்து போனது.
சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்ட பின், நாட்டு மக்களுக்கு அதைப் பற்றி தெரிவித்தோம். ஆனால் பாலகோட் தாக்குதலுக்குப் பின் எந்த அறிவிப்பும் செய்யாமல் அமைதியாக நிலைமையை கண்காணித்தபடி இருந்தோம். ஆனால் அதிகாலை 5 மணிக்கே மோடி தங்களை தாக்கி விட்டதாக பாகிஸ்தான் டுவிட்டரில் அழத் தொடங்கி விட்டது.
இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பதிலடி எதுவும் தரமாட்டார்கள் என்று அவர்கள் கருதினர்.
எதிரிகளின் இந்த எண்ணத்திற்கு காரணம் 2014 ஆம் ஆண்டுக்கு முன் ஆட்சியில் இருந்த ரிமோட் கன்ட்ரோல் அரசாங்கம்தான்!
இந்தியாவின் கடுமையான தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதிகள் பீதியில் உள்ளனர். ஆனால் இந்தியப் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து சிலர் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகின்றனர்,
இந்திய மண்ணில் விளைந்ததை சாப்பிட்டுக் கொண்டு, பாகிஸ்தானுக்கு உதவும் விதத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியனின் ரத்தம் தான் அவர்களது உடலில் ஓடுகிறது என்பதில் சந்தேகம் உள்ளது போலும்! என்று பேசினார் பிரதமர் மோடி!