தமிழகத்திற்கு தாராளமாக சென்று கொண்டிருந்த காவிரி நீரை அணை போட்டுத் தடுத்து நிறுத்தியவர் தேவகௌட என அவரது மகனும் கர்நாடக முதல்வருமாகிய ஹெச்.டி. குமாரசாமி பளிச்செனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மக்களவைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, ஹேமாவதி அணை நீரை தும்கூர் மாவட்டத்துக்கு திருப்பி விட முயற்சி செய்யாத தேவகௌடாவை தும்கூர் மக்கள் இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக சிலர் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்துக்கு தாராளமாக காவிரி நீரைத் தர முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா தயாராக இருந்தார்! அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தித்தான் ஹேமாவதி அணை கட்டப்பட்டது. தமிழகத்துக்கு தங்குதடையின்றி தாராளமாகச் சென்று கொண்டிருந்த தண்ணீரை தடுப்பதற்காகவே தேவகௌட போராடி ஹேமாவதி அணையைக் கட்டினார் என்று கூறினார்.
ஹேமாவதி அணை கட்டப் பட்ட போது, தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் திமுக., தலைவர் கருணாநிதி என்பதும், அவர் அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்காததாலேயே காவிரி நீர்ப் பிரச்னை பூதாகாரமாக தமிழகத்தில் உருவெடுத்தது என்றும் குற்றம் சாட்டப் பட்டு வருகிறது.
ஆனால், இப்போதும் அதனை எல்லாம் திசை திருப்பி விட்டு, திமுக., வேறு கதைகளைப் பேசி, காவிரிப் பிரச்னையை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதற்குக் காரணம், பாரதியின் பாடல்படி அமைந்த அடிப்படைக் காரணம்தான்… “கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இவை என்ற அறிவுமிலார்…” !