2019 தேர்தலுக்கு பாஜகவின் தமிழ்நாடு வியூகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
எனது கருத்து: அதிமுகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து செயல்படுவது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களும் தேசவிரோத கும்பல்களும் இணைந்து செய்துவரும் மோதி/பாஜக மீதான வெறுப்பு பிரசாரங்களை நேரடியாக முறியடித்து நீர்த்துப் போகச் செய்ய முடியும். மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெற்றுள்ளார்கள், அந்த நல்லாட்சி தொடரவேண்டும் என்ற ஒரே செய்தியை முன்னிறுத்தினாலே போதும்.
தற்போதைய அதிமுக ஆட்சி மீது பெரிய அளவிலான அதிருப்தி / வெறுப்பு எதுவும் மக்களிடத்தில் இல்லை, மாறாக நல்ல அபிப்பிராயமே உள்ளது. (தூத்துக்குடி, கஜா புயல் ஆகிய விஷயங்கள் அந்தப் பகுதிகளில் உள்ள ஒருசில தொகுதிகளை மட்டுமே பாதிக்கும்). எனவே இக்கூட்டணி அதிக இடங்களைப் பெற்று திமுக – காங்கிரஸ் ஊழல்வாதக் கூட்டணியை முற்றிலுமாக ஓரங்கட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இத்தகைய கூட்டணிக்கு ஒத்துக்கொண்டால் தங்களது வழக்கமான வாக்குவங்கி அதிருப்தியுற்று விடும் என்று அதிமுக எந்தவிதத்திலும் அச்சப்படத் தேவையில்லை. மதவாத மூளைச்சலவைக்கு ஆட்பட்டு கண்மூடித்தனமான மோதி வெறுப்பு கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்து, அதிமுக தொண்டர்கள், அபிமானிகள் மற்றும் வாக்காளர்கள் யாரிடமும் அத்தகைய வெறுப்பு கிடையாது என்பது மட்டுமல்ல, ஒருவித பாஜக ஆதரவு உள்ளோட்டமும் (undercurrent) இருக்கிறது என்பதே நிதர்சனம். இதை அதிமுக தலைமை உணர வேண்டும்.
2019 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி செலுத்தக்கூடிய தாக்கம் என்பது தனிப்பட்ட அளவில் எந்த வகையிலும் பொருட்படுத்தக் கூடியதாக இருக்காது. ஆனால் மேற்படி கூட்டணிக்கு அவர் ஆதரவு தந்தால், அது கேக்கின் மேல் தூவப்பட்ட சர்க்கரை போல ஒரு நல்ல எக்ஸ்ட்ரா எஃபெக்ட் தரும். ரஜினியின் (இதுவரை கூட எந்தக் கட்சி என்று தெரியாத) அரசியல் நுழைவுக்கு இதைவிட உருப்படியான பயன் வேறொன்று இருக்க முடியாது.
- ஜடாயு, பெங்களூர்