தேமுதிக., திமுக., இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து, தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினார்.
ஆனால், அவரை பேச விடாமலும், திமுக.,, கட்சியைச் சேர்ந்த இரு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, பிரேமலதா விஜயகாந்தை கோபப் பட வைத்தார்கள். இதனால் கடுப்பான அவர், தொடர்ந்து அனைத்து செய்தியாளர்களையும் நீ, வா, போ என மரியாதைக் குறைவாக ஒருமையில் அழைத்தார்.
மேலும், எங்க அலுவலக கேட்டுவாசல்ல காத்துக் கிடக்குறாங்கன்றதுக்காக நீங்க எதிர்பார்க்குற நேரத்துல, நீங்க நினைக்கிற போதெல்லாம் நாங்க செய்திய தரமுடியுமா? நாங்க எப்ப எந்த முடிவு எடுக்கிறோமோ அப்பதான் கொடுக்க முடியும் என்றார்.
தங்களை கேட்டு வாசலில் காத்துக் கிடப்பவர்கள் என்று பிரேமலதா சொன்னது, செய்தியாளர்களை உசுப்பேற்றியது. தொடர்ந்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். ஒருமித்த குரலில் கூச்சலிட்டு, பிரேமலதா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்கள்.
இது போல் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியும் மிக காரசாரமாக இருந்தது. அதிலும், ஊடகத்தைச் சேர்ந்த ஓரிருவர் செய்த அலம்பல்கள் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கே மோசமான பெயரைப் பெற்றுத் தந்தது.
இது இப்படி இருக்க, இன்னொரு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இப்போதெல்லாம் பிரதம மந்திரி நரேந்திர மோடியை வெறுமே மோடி மோடி என்றுதான் மேடைகளிலும் பத்திரிகைகளிலும் டிவியிலும் உச்சரிக்கிறார்கள்.
ஆனால் இதற்கு முன் கருணாநிதியையோ ஜெயலலிதாவையோ இதுபோல் வெறும் பெயர் சொல்லி உச்சரித்து விட முடிந்த தில்லையே!
கலைஞர் டாக்டர் கருணாநிதி என்றோ அல்லது கலைஞர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஒரு பயமுறுத்தல் இருந்தது.
அதேபோல் செல்வி ஜெயலலிதா என்றோ இன்னும் போகப்போக அம்மா என்றோ குறிப்பிட வேண்டும் என்றும் எச்சரிக்கை இருந்ததல்லவா?
அப்படி எனில் ஊடகத்தினருக்கு ஒரு நாட்டின் பிரதமர் என்றால் இளக்காரமாகப் போய் விட்டதா?! பிரதமர் மோடி என்றோ, அல்லது முழுப் பெயரைச் சொல்லியோ ஏன் அவர்கள் அழைப்பதில்லை!
ஒரு நாட்டின் பிரதமரை கேவலமாகவும், மிக மோசமாகவும் தரம் தாழ்ந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சிக்கும் போது இது பற்றி ஏன் அவர்கள் சுட்டிக் காட்டுவதில்லை.
குறிப்பாக வைகோ போன்ற பச்சோந்திகளுக்கு பத்திரிகையாளர்கள் ஏன் அச்சப் படுகிறார்கள்?! தங்களைக் குறித்து வைகோ தங்கள் ஊடக முதலாளியிடமே போட்டுக் கொடுத்துவிடுவார், நேரடியாகப் பேசி வத்தி வைத்து விடுவார் என்ற பயம் தானே!
அதையெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்காதவர்கள், தங்களை ஒரு பெண்மணி ஒருமையில் அழைக்கிறார் என்பதற்காக கோவம் கொள்வது முரணாக இல்லையா?! – என்று கேள்வி எழுப்புகிறார்கள்!