சென்னையில் நாளை ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர முழு ஊரடங்குக்கு முன் மாவட்ட மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட இபாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 ம் தேதி முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பணியாளர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட இ-பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுவரை இ-பாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம் ஊரடங்கின் போது ‘இ-பாஸ்’ கேட்டு 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொது முடக்க அறிவிப்பு வெளியிட்டப் பட்ட நாளில் இருந்து, திருமணம், இறப்பு, தொழில் சம்பந்தமாக, வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்குச் செல்ல தமிழக அரசு சார்பில் ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரவும் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப் பட்டது. இதை அடுத்து வெளியூர் பயணங்கள் செல்ல, தமிழகத்திற்கு வர என பல லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவாயின.
இவ்வாறு இதுவரை 37.35 லட்சம் பேர் இபாஸ் கேட்டு விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் மாவட்டங்களுக்குள் செல்ல, 52,282 விண்ணப்பங்களும், மாவட்டங்களுக்கு வெளியே செல்ல 29.05 லட்சம் விண்ணப்பங்களும் பதிவாகியுள்ளன.
தமிழகத்துக்கு வெளியே செல்ல 3.01 லட்சம் விண்ணப்பங்களும், தமிழகத்திற்குள் வர 2.66 லட்சம் விண்ணப்பங்களும் பதிவாகி உள்ளன. இவற்றில் இதுவரை 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இபாஸ் கொடுக்கப் பட்டுள்ளது.
அதில் வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்கான விண்ணப்பங்களில் 57 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் கேட்டபோது, தமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை போலி ஆவணங்கள் வாழியாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன என்கின்றனர் அதிகாரிகள்.