கோவை பகுதியில் செய்தியாளராக பணியாற்றிய சந்தோஷ் வேலாயுதம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட இரங்கல் செய்தியில்…
கோவை சன் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளரும், திருப்பூர் நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளருமான சந்தோஷ் வேலாயுதம் விபத்தில் சிக்கி காலமானார் என்ற செய்தி கோவை பத்திரிகையாளர்கள் இடையே சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டியில் விபத்தில் சிக்கிய அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
எல்லோரிடமும் இயல்பாக அன்போடு பழகும் அவர் செயல்பாடுகள், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே மட்டுமல்ல நண்பர்கள் மற்றும் மக்களிடையே, அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2018-19 ஆம் ஆண்டுகளில் நமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றிய போது அவர் அளித்த பங்களிப்பும், மன்றம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அவர் காட்டிய ஈடுபாடும் நினைவு கூறத்தக்கது. குறிப்பாக மன்றம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட பேரிடர் கால பணிகளில் அவர் உற்சாகத்துடன் பங்கேற்றது அனைவரின் நினைவிலும் எப்போதும் நிலைத்திருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கோவை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
இந்த தருணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், உடன் துணை நின்ற தோழர்களையும் நினைவு கூற மன்றம் கடமைப்பட்டுள்ளது.
உடன், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என , சக பத்திரிகை நண்பர்களையும் கோவை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.