இசைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கியவர் தலைமையில் பயிற்சி முகாம் நடக்க உள்ளதால், தமிழகத்தில் உள்ள மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞராக உள்ளார்.
இவர், கரூர் மாவட்ட இசைப்பள்ளியில் ஆய்வுக்கு சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாக, அப்பள்ளி இசை ஆசிரியை தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்திக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஆசிரியர்கள், ஊழியர்கள் பேரவை சார்பில் கரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகாரளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏப்., 8 முதல் 10 வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது.
இதற்கு, மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன், தலைமை வகிக்கிறார் என, தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
இது, மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு இசைப்பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றபோது, கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் தகாத முறையில் நடந்த கொண்டதால், புகார் எழுந்தது. புகார் தொடர்பாக, விசாகா கமிட்டி விசாரணை நடந்து வருகிறது.
இப்போது, ஜாகீர் உசேன் தலைமையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற, சுற்றறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீது புகாரளித்து, ஒரு மாதம் கடந்த நிலையில், அரசியல் தலையீட்டால், எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. நாளிதழில் செய்தி வெளியான பின் விசாரணை நடக்கிறது.
இந்த விசாரணை முடியும் வரை, இவர், தலைமையில் பயிற்சி அளிக்க கூடாது. இவ்வாறு கூறினர்.
இந்த நிலையில், பாலியல் புகாருக்குள்ளான நடன கலைஞரும், அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞருமான ஜாகீர் உசேன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழக அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஜாகிர் ஹு சேன் என்பவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அரசு பள்ளி ஆசிரியைகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளதாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் கூறியுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளி ஆசிரியைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாக்கியிருப்பதும், உடன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.உடன் ஜாகிர் ஹுசேனை பொறுப்பில் இருந்து அகற்றுவதோடு பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பெண்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் விசாகா குழு இருக்க வேண்டும். இல்லாத நிலையில் உடன் விசாகா குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை மற்றும் பொறுப்பு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.