தஞ்சாவூரில் மனுவை வாங்க நேரில் வராத கலெக்டரை கண்டித்து, விவசாயி ஒருவர் திடீரென உடைகளை களைந்து நிர்வாணமாக போராடியதால் பெண் போலீசார் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயும் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை நேரில் சந்திக்க வராத கலெக்டரை கண்டித்து, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி., ராஜ்குமார் விவசாயிகளை கைது செய்து சட்டையை கழற்றி விடுவேன் எனக் கூறினார். இதைக் கண்டித்து விவசாயிகள் கூச்சலிட்டதால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன் உடைகள் அனைத்தையும் களைந்து நிர்வாணமாக நின்றபடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டார். இதனால், அங்கிருந்த பெண் போலீசார் மற்றும் பெண்கள் ஓட்டம் எடுத்தனர். தகவலறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், விவசாயிகளை விருந்தினர் அறைக்கு வரவழைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.





