குளித்தலையில் உள்ள அரசு பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் தேர்வு எழுதும் அவலநிலை ஏற்பட்டு இருக்கின்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கின்றது. இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகின்றது. இதனால் மாணவ- மாணவிகள் திறந்தவெளியில் பள்ளி வராண்டாவில் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இப்பள்ளியில் இருந்த ஒரு கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் பல மாதங்களுக்கு முன்பாக அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே அமர்ந்து படித்து வருகிறார்கள். ஆனால் மழை பெய்யும் சமயத்தில் மழைக்கு ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
போதிய அளவு வகுப்பறை இல்லாத காரணத்தால் மாணவ-மாணவிகள் தனியார் மண்டபத்தில் அமர வைத்து பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முழு ஆண்டு தேர்வு கூட அந்த தனியார் திருமண மண்டபத்தில் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளிக்கு கட்டிடம் வசதியை ஏற்படுத்தித் தருமாறும் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.