செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் எல்லாம் ஆவியானது ஏன் என்ற புதிருக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதேபோல் அங்கு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. சுற்றுசூழல் ஆர்வலர்கள் பலர் உலக வெப்பநிலை உயர்வது பற்றி கடுமையாக எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
ஐநா அமைப்பு மூலம் வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூட, மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
இது மனித குலத்திற்கான “கோட் ரெட்” எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று கூறி உள்ளது,
இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை விஞ்ஞானிகள் தரப்பு வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாக நம்பப்படுகிறது. அங்கு ஆறுகள், ஏரிகள், குளங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இப்போதும் உள்ளன. ஆனால் அவை எல்லாம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக நம்பப்படுகிறது.
ஆனால் அங்கு இருந்த நீர் ஆவியானது எப்படி? தண்ணீர் மாயமானது எப்படி? என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. விஞ்ஞானிகளை இந்த கேள்வி இன்னும் குழப்பிக்கொண்டே இருக்கிறது.
இங்கு நீர் ஓடிய தளங்களை நாசாதான் தனது மரினர் 9 மிஷன் மூலம் 1972ல் கண்டுபிடித்தது. இந்த நிலையில்தான் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு குழு இங்கு இருந்த நீர் ஆவியானதற்கு எது காரணமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
முதலில் இங்கு நீர் இருந்த அடையாளங்கள் இன்னும் மறையாமல் இருக்க காரணம், செவ்வாய் கிரகத்தில் டெக்டோனிக் அடுக்குகள் இல்லை. இந்த அடுக்குகள்தான் பூமியில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
இதனால் நதிகள், ஆறுகள் இருந்த தடயங்கள் சில ஆயிரம் ஆண்டுகளில் மறையும். ஆனால் பூமியில் இருப்பது போல செவ்வாயில் டெக்டோனிக் அடுக்குகள் இல்லை என்பதால் அங்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஆறுகளின் தடங்கள் கூட இப்போதும் கண்கூடாக உள்ளது.
இது போக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் காணப்படும் மர்ம பொருள் அல்லது வாயு ஒன்றுதான் அங்கு வெப்பநிலை வெளியேறாமல் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
இதுதான் அங்கு இருந்த நீர் எல்லாம் ஆவியாக காரணமாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது ஏதோ ஒரு மர்ம பொருள்தான் குற்றவாளி.. அதுதான் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை குறையாமல் பார்த்துக்கொண்டு, நீரை ஆவியாக வைத்து இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
அங்கு இருக்கும் கார்பன் டை ஆக்சைட் காரணமாகவே வெப்பநிலை உயர்ந்து நீர் ஆவியானதாக இதற்கு முன் கூறப்பட்டது. ஆனால் இந்த ஆய்வில் கார்பன் டை ஆக்சைட் மூலம் நீர் ஆவி ஆகி இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
மாறாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருக்கும் அடர்த்தியான, ஐஸ் போன்ற காற்று நீர் திவலைகள் கொண்ட மர்ம பொருள்தான் அங்கு வெப்பநிலையை தக்க வைத்து, வெப்பநிலையை உயர்த்தி, நீரை ஆவியாக வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால்தான் தற்போதும் செவ்வாய் கிரகத்தில் வெப்பநிலை உயர்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்போதைக்கு அது ஒரு மர்ம பொருள் என்று மட்டுமே விஞ்ஞானிகள் துப்பு துலக்கி உள்ளனர்.. அது என்ன பொருள் என்று இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.