திருப்பதி: 3648 கிலோ மீட்டர் பிரஜா சங்கல்ப பாத யாத்திரை நிறைவை தொடர்ந்து திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலையேறி சென்று தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திரா முழுவதும் கடந்த 14 மாதங்களாக பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் சுமார் 3648 கிலோ மீட்டர் பாத யாத்திரையாகச் சென்று மக்களை சந்தித்து வந்தார் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.. இந்நிலையில் இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து மலையேறி சென்று இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.
ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் நடத்திய யாத்திரை கடந்த 14 மாதங்கள் ஆக ஆந்திரா முழுவதும் நடைபெற்று நேற்று முன்தினம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரத்தில் நிறைவடைந்தது
இந்த நிலையில் இச்சாபுரத்தில் இருந்து ரயில் மூலம் இன்று காலை ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்தடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் வரவேற்று திருப்பதி வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து திருப்பதி மலை அடிவாரத்துக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து மலை ஏறிச் சென்றார்.
இடையில் திவ்ய தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வழங்கப்படும் இலவச தரிசனம் டோக்கனை ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சியினர் வாங்கினர்.
தொடர்ந்து மலையேறி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பக்தர்களோடு பக்தர்களாக இலவச திவ்ய தரிசனத்தில் வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டி வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரையை துவங்குவதற்கு முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.