திருவள்ளூர்:
“தர்சநோதயம்” என்ற தலைப்பில், உபந்யாசகரும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா இதழின் ஆசிரியருமான உ.வே. எம்.வி. அனந்தபத்மநாபாசாரியர் ஸ்வாமியின் ’சரண்’ அமைப்பும் திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் தேவஸ்தானமும் இணைந்து, நான்கு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருவள்ளூரில் ஶ்ரீ இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டினை ஒட்டி 04.05.2017 முதல் 07.05.2017 வரை நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மிக விமரிசையாக நடந்து முடிந்தது.
தர்சநோதயம் தொடக்க விழா
04.05.2017 வியாழக்கிழமை அன்று …
வைத்ய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் வழங்கும், அஹோபில அழகிய சிங்கர் ஜீயரின் முன்னிலையில் அனந்தபத்மநாபன் ஸ்வாமி விழாவில் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
துவக்க விழாவில், திருமதி ரேவதி அனந்தபத்மநாபன், திருமதி ரம்யா வாசுதேவன் இருவரும் குத்து விளக்கேற்றி வைத்தனர். தேவஸ்தான ஶ்ரீகாரியம் ஸ்வாமி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.
ஜீயரின் திருக்கரங்களால் அனந்தபத்மநாபன் ஸ்வாமியின் புத்தக வெளியீடு மற்றும் தீதில்லா நல்லோர் திரள் எனும் TNT (SARAN) சரண் சேவகர்களின் கை வண்ணத்தில் உருவான ‘ஶ்ரீபாஷ்யபுரம்’ எனும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதனை ஜீயர் மேற்பார்வையிட்டார்.
தர்சநோதயம் முதல் நாள் விழா:-
04.05.2017 வியாழக்கிழமை அன்று…
முதல் நாள் நிகழ்ச்சியில் முதலில் திருமதி. மைத்ரேயி பத்ரி நாராயணன் குழுவினரின் “இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. கச்சேரி செவிகளுக்கு இனிமையாக இருந்தது. தொடர்ந்து “முனிவனும், புனிதனும்” எனும் தலைப்பில் ஶ்ரீ உ.வே.பேரங்கியூர் பி. ஶ்ரீநிவாஸ ராகவன் சுவாமியின் உபன்யாசம் நடந்தது. மாலை நேரத்தில் ஏகாந்த வேளையில் எங்கும் பார்த்திராத திருவரங்கம் பெரியகோயில் மிராசு வீணை ரங்கராஜன் திருகுமாரர்களான வீணை ஶ்ரீநிவாஸன், வீணை ராமானுஜம் மற்றும் வீணை கோவிந்தன் ஆகியோரின் “வீணை ஏகாந்த இன்னிசை” எனும் கச்சேரி நடைபெற்றது.
முதல் நாளின் கடைசி நிகழ்ச்சியாக திண்டிவனம் வீரா வெங்கடேச பாகவதர் குழுவினரின் “நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (ஶ்ரீராமானுஜ திவ்யநாம சங்கீர்த்தனம்)” நடைபெற்றது. அதில் ஹனுமன், சிம்மம் ஆகியோர் போல் வேடமிட்டு கோலாகலமான ஆட்டமாக நடைபெற்றது. .
தர்சநோதயம் இரண்டாம் நாள் விழா:-
05.05.2017 வெள்ளிக்கிழமை அன்று…
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் முதலாவதாக டாக்டர் ஹேமா ஶ்ரீரங்கநாதன் குழுவினரின் “வீணை இன்னிசை. வீணையை மீட்டுவதில் தான் என்ன ஒரு தனி அழகு இல்லையா? செவிகளுக்கு இனிமையாக ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து “திருமால் கவிச்செல்வர்” ஶ்ரீ.உ.வே. ரகுவீர பட்டாசாரியார் ஸ்வாமியின் “யதிபதியும், குலபதியும்” எனும் தலைப்பில் உபன்யாசம் நடைபெற்றது. இதனைக் கேட்பதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
இரண்டாம் நாள் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சியாக யுவபுரஸ்கார் பரிசு பெற்ற விஜய்மாதவன் குழுவினர் வழங்கிய “ஆழ்வார் இன்னமுது” எனும் நாட்டிய நிகழ்ச்சி அருமையாக நடந்து முடிந்தது.
தர்சநோதயம் மூன்றாம் நாள் விழா:-
06.05.2017 சனிக்கிழமை அன்று…
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முதலாவதாக “ராமானுஜரின் வாழ்வில் பெண்கள்” எனும் தலைப்பில் கல்லூரிப் பெண்களின் மிகவும் வித்தியாசமான கலந்துரையாடல் இனிமையாக ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து அரையர் சேவை. அரையர் ஶ்ரீ.மான் வேங்கடேசன் வழங்கிய “தேசிகப்ரபந்தம்” நடைபெற்றது. இதில் முரளி தேசிகரும் பாடினார்.
பிறகு கடைசி நிகழ்ச்சியாக ப்ரியாமுரளி குழுவினர் வழங்கிய “நவவிதபக்தி” எனும் நாட்டிய நிகழ்ச்சி மிக அருமையாக நடந்து முடிந்தது.
தர்சநோதயம் நான்காம் நாள் விழா:-
07.05.2017 ஞாயிறு அன்று …
நான்காம் நாள் நிகழ்ச்சியில் முதலாவதாக “ஜுகல்பந்தி” எனும் தலைப்பில் “உபயவேதம்”, “விலக்ஷணகான விசாரத்” ஜானகி ராமானுஜம் ப்ரம்மஶ்ரீ நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் குழுவினரின் வேதம்-கணம், திவ்யப்ரபந்தம், ஸ்வரம் மற்றும் பக்கவாத்தியங்களுடன் வித்தியாசமான நிகழ்ச்சி இனிமையாக நடைபெற்றது . இதில் ஏபிஎன் ஸ்வாமியும் ட்ரம்ஸ் செய்து ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடந்தது. இந்த நிகழ்வில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற என்.கோபால்சாமி, குமுதம் ஜோதிடம் இதழாசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ.பி.என். ஸ்வாமியின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசியபோது, தங்களது அனுபவங்களை முத்துக்களாக வழங்கினர்.
அந்நாளின் கடைசி நிகழ்ச்சியாக விவாத மேடை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமானுஜர் செய்த புரட்சி எனும் தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. இதில், செங்கோட்டை ஶ்ரீராம், மங்களம் ஶ்ரீகாந்த், மற்றும் நிர்மலா மணவாளன் ஆகியோர் மதத்திலா? என்ற தலைப்பிலும், ஶ்ரீவல்லபன் ஸ்வாமி, Dr. லக்ஷ்மி நரசிம்மன் மற்றும் வைஜயந்தி சுதர்ஸனன் ஆகியோர் மனத்திலா? என்ற தலைப்பிலும் விவாதம் செய்தனர். இந்த நிகழ்வுக்கு நடுவராக இருந்து வழிநடத்தினார் அனந்தபத்மநாபாசாரியார். நிகழ்வின் இறுதியில் நடுநாயகமான தீர்ப்பை வழங்கி நான்காம் நாளின் இறுதி நிகழ்ச்சியை சுவையாக முடித்து வைத்தார்.
மிகவும் சிறப்பாக அருமையாக நடந்து முடிந்த இந்த நான்கு நாள் நிகழ்ச்சிக்கும் வந்திருந்து, பங்கேற்று சிறப்பாக நடத்தி தந்தவர்களுக்கும் அதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாக சார்பாகவும் ஏபிஎன் ஸ்வாமியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துப் பேசினார் தேவஸ்தானத்தின் சம்பத் ஸ்வாமி.
இந்த நிகழ்ச்சியைக் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாசகி ஒருவரின் அனுபவப் பதிவு இது…
“தர்சநோதயம்” என்ற பெயருக்கு தகுந்த படி மிகவும் அருமையான தர்சனத்தைக் கண்டேன். அந்த நான்கு நாட்களும் சென்றதே தெரியவில்லை. என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. இந்த இராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தில் இருப்பதே மிகவும் புண்ணியம் செய்திருக்கிறோம்.
அதிலும் அடியேன் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறேன். APNஸ்வாமி ஆசாரியராக கிடைத்ததிலும் தர்சனோதயா எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதிலும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். APN ஸ்வாமிக்கு நன்றி சொல்ல என்றென்றும் மிகவும் கடமைபட்டுள்ளேன். எனக்கும் ஒரு அங்கிகாரம் கொடுத்து பங்கேற்க வைத்தார். அடியேனுக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை. பள்ளியில் படிக்கும் போது மேடையில் ஏறியது. அந்த நாள் ஞாபகம் வந்தது. மறுபடியும் அந்த மாதிரி சந்தர்ப்பம் வரும் என்று கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. அதுவும் எப்பேற்பட்ட அறிஞர்கள் கூட சரிசமமாக என்னையும் அமர்த்திவிட்டார். அது நினைக்கும் போது மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறது. அடியேன் சிறிதும் அருகதை இல்லாதவள்.
நான் அவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறேனா? என்று நினைக்கும் போது ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது. எனக்குள்ளேயும் ஏதோ தகுதி இருக்கிறது என்று அதை உள்ளுக்குள்ளேயே வைத்திருக்காமல் அதை வெளிபடுத்தி மேடையில் ஏற்றி வைத்தார் APN ஸ்வாமி அவர்கள்.
ஏதோ ஒரு சாதனை புரிந்தது போல் இருக்கிறது. என்னைப் பெற்ற தாய் தந்தைக்கும் நமஸ்காரம். என் புகுந்த வீட்டின் ஆசிர்வாதத்திலும் என் கணவரின் ஒத்துழைப்பிலும் நான் மேடையில் ஏறி பேசினேன். அதிலும் முக்கிமாக APN ஸ்வாமி அவர்கள் கொடுத்த மன தைரியம் தான் மிக முக்கிய காரணம். அவருக்கு சிஷ்யனாக இருப்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.
தர்சநோதயம் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் A1 நெத்தியடிதான். அவ்வளவும் அருமை. ஜீயரைக் கொண்டு திறந்து வைத்த ‘ஶ்ரீபாஷ்யபுரம்’. சங்கீதம், எங்கும் பார்த்திராத ஏகாந்த வீணைக் கச்சேரி, ஶ்ரீராமானுஜரின் நாமசங்கீர்த்தனம், வீணை இசை, சங்கீத உபன்யாசம், நாட்டியம், அரையர் சேவை, ஶ்ரீராமானுஜரின் வாழ்வில் வந்த பெண்களைப் பற்றி ஒரு வித்தியாசமான கலந்துரையாடல், இவர்கள் சந்தித்தால் எனும் தலைப்பில் (ராமானுஜர், வேதாந்த தேசிகர், ஆதிவண்சடகோப ஜீயர்) திருவள்ளூரில் சந்திக்கும் வித்தியாசமான படைப்பு, நவ வித பக்தி எனும் நாட்டியம், புது விதமான ஜுகல் பந்தி, பல உபன்யாசங்கள் பல வி.ஐ.பி.கள் கொண்டு புத்தக வெளியீடு விழா மற்றும் கடைசியாக விவாத மேடை ராமானுஜர் செய்த புரட்சி மனத்திலா? மதத்திலா? இதற்கு APN ஸ்வாமியின் ஸ்டைலில் எதிர்பாராத தீர்ப்பு எல்லாவற்றையும் பார்க்க கண்கொள்ளா காட்சிகளாக இருந்தன.
இதில் APN ஸ்வாமிக்கு முக்கியமாக பெரும் பங்களிப்பு ஒத்துழைப்பு தந்த பூமா மாமி மற்றும் ரேவதி ஸ்வாமினி அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல மிகவும் கடமைபட்டுள்ளேன். மற்றும் சுபத்ரா சொன்னது போல் லட்சுமி, பத்மினி, ஜெயந்தி மாமி, அர்ச்சனா, விஜயலக்ஷ்மி, சுபத்ரா ராகவன், நிவாஸ், சுந்தரம் ஶ்ரீனிவாசன் சுவாமி, ராஜாராம் சுவாமி், ராகுல் மற்றும் தேசிகன் சுவாமி வெயில் என்றும் பாராமல் உழைத்த நமது TNT உறுப்பினர்களுக்கும் நன்றி. இன்னும் நிறைய TNT உறுப்பினர்கள் வராதவர்களுக்கு பெரும் இழப்பு.
இதேபோல் இன்னும் பல நிகழ்ச்சிகள் APN ஸ்வாமி அவர்கள் மேன்மேலும் நடத்தனும் அதில் அடியேனும் பங்கு கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று பெருமாளை பிரார்த்திக்கிறேன்.
செய்தித் தொகுப்பு: – நிர்மலா அழகியமணவாளன்