திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி பல கோடி தீர்த்தங்கள் உள்ளது. இதில் முக்கிய தீர்த்தங்களாக ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் , தும்புரு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம் , ராமகிருஷ்ண தீர்த்தம் , பசுப்பு தாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் கூறப்படுகிறது. இந்த தீர்த்தங்களில் அதன் நட்சத்திரத்தின்படி புனித நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதன்படி தை மாத பௌர்ணமி அன்று ராமகிருஷ்ண தீர்த்தத்தில் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமலையில் சேஷாசல மலையில் அடர்ந்த வனப்பகுதியில் மிகவும் புனிதமான தீர்த்தமாக கருதக்கூடிய ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி இன்று நடைபெற்றது.
இங்கு ஸ்ரீராமகிருஷ்ண மகரிஷி தவம் இருந்த இடம் என்பதால் இந்த தீர்த்தத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. இதையொட்டி தை மாத பெளர்ணமி என்பதால் ஏழுமலையான் கோவிலில் இருந்து வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக காலை 10 மணிக்கு ராமகிருஷ்ண தீர்த்தத்திற்கு அதிகாரிகள் பக்தர்கள் புறப்பட்டனர்.
தீர்த்தத்தில் உள்ள ராமருக்கும், கிருஷ்ணருக்கும் பால், தயிர் ,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பாபநாசம் அணை அருகே பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம், புளியோதரை, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.
தீர்த்தம் அருகே சுகாதாரத் துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும் , இன்ஜினியரிங் துறையின் சார்பில் பல இடங்களில் பக்தர்களின் வசதிக்காக கட்டைகளால் படிகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் கோவில் துணை செயலாளர் ஹரிந்திரநாத், பேஸ்கார் ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.