மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் மாசி கொடைவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சமய மாநாடு, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் வீதி உலா வருதல், வில்லிசை ஆகியவை நடைபெற்று வருகின்றன.
பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழாவில் திங்கட்கிழமை இன்று இரவு 9.30க்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.
10-ஆம் திருவிழாவான நாளை நள்ளிரவு ஒடுக்கு பவனி மற்றும் ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மண் பானைகளில் வெள்ளைத் துணியால் மூடி, வாய்ப்பூட்டு கட்டிய பூசாரிகளால் தலையில் சுமந்து வரப்பட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும்.
பின்னர், ஆலய நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும். அதைத் தொடர்ந்து குருதி கொட்டும் நிகழ்ச்சி, ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
அதிகாலை சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக் குடம் எடுத்து வருதல், அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், அடியந்தர பூஜை, குத்தியோட்டம், பிற்பகல் 2 மணிக்கு கடந்த வருடம் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
இந்த பூஜைகளைக் காண்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகிறார்கள்.