பிரிக்க முடியாதது எது? என்று திருவிளையாடல் தருமி கணக்காக கேள்வி கேட்டால்… சங்கரனார் பதில் சொல்வார்… கிரிக்கெட்டும் சூதாட்டமும் என்று!
டி20 போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் என்று சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கும் சூதாட்டம், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக வெளித்தெரிந்தது. இதனால் இரு அணிகள் இரு ஆண்டுகளுக்கு தடை பெற்று ஒதுங்கியும் இருந்தன.
ஐபிஎல் போட்டிகளில் ஆடும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறாத திறமைசாலிகளுக்காகவே டிஎன்பிஎல் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் பெரிதாக உருவெடுத்தன. ஊருக்கு ஊர் அணி சேர்த்து இந்தப் போட்டிகளும் நடந்துதான் வருகின்றன.
இதனிடையே, இந்தப் போட்டிகளிலும் சூதாட்டம் நடைபெற்று வருகிறது என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து வைரலாகப் பரவி வரும் செய்திகள், டிஎன்பிஎல் போட்டிகளையும் ஐபிஎல் ரேஞ்சுக்கு உசத்தியுள்ளன.
தூத்துக்குடி – மதுரை அணிகளுக்கு இடையே 2019 ஜூலையில், திண்டுக்கல்லில் நடந்த TNPL கிரிக்கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் நடந்துள்ளதாக BCCI விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.
மேலும், பிற அணிகள் விளையாடிய போட்டிகளிலும் சூதாட்டம் நடைபெற்றுள்ளது என்றும், தூத்துக்குடி, மதுரை இரண்டு அணிகளையும் தடை செய்திட பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது!