ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோட்டிப் கோப்பை கால்பந்து தொடரில், இந்தியா யு-20 அணி பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், இந்தியா யு-20 அணியின் தீபக் டாங்ரி 4வது நிமிடத்திலேயே அபாரமாக கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் இந்திய அணி முன்கள வீரர் ஜாதவ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
எனினும், ஒருங்கிணைந்து விளையாடிய இந்தியா யு-20 அணிக்கு 68வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் அன்வர் அலி லாவகமாக கோல் அடித்து 2-0 என முன்னிலையை அதிகரித்தார். இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய அர்ஜென்டினா யு-20 அணி 72வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டது. ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா யு-20 அணி வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தது. இந்த தொடரில் 2 தோல்வி, ஒரு டிரா கண்டிருந்த இந்திய யு-20 அணி, அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ளது.