கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து. #KrishnaJayanthi | #EdappadiPalanisamy
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்…
காக்கும் கடவுளாம் பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்த நன்னாளில், எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்!
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும் கேட்பவர்களும் புண்ணிய உலகைச் சென்று அடைவது உறுதி! மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்!
கிருஷ்ணர் அவதரித்த இந்த இனிய நன்னாளில் குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்து அவர்களின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து கால் தடங்களை வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை வரிசையாக வைத்து, பார்ப்பவரின் கண்களுக்கு அந்தக் குழந்தை கிருஷ்ணனே கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால்தடம் பதித்து நடந்து வந்தது போல தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து, கோலமிட்டு, பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய் பழ வகைகளை படைத்து இறைவனை வழிபட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்!
அனைத்து உயிர்களிடத்தும் நட்பும் கருணையும் உடையவனாய், நான், எனது என்ற பற்று நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கொண்டு பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் இறைவனிடத்தில் மனதையும் மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டும் என்ற கீத உபதேசத்தை மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்பதை தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் மீண்டும் ஒருமுறை எங்களது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம் – என்று அதிமுக., ஒருங்கிணைப்பாளரும் பொருளாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தலைமை நிலையச் செயலாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி இருவரும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்!