திண்டுக்கல் சாணார்பட்டியில் சின்னம் இல்லாததால் சிக்கல்: வேட்பாளர் சுட்டிக்காட்டிய பின்னர் வாக்குச்சீட்டு மாற்றம்
திண்டுக்கல்லில் இன்று முதற்கட்டமாக ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் சின்னம் இல்லாததால் ஏற்பட்ட சிக்கலால் வாக்குச்சீட்டை மாற்றக் கோரி வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சாணார்பட்டி ஊராட்சியில் இரண்டாவது கிராம ஊராட்சி வார்டு பதவிக்கு ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் கடைசி வேட்பாளரின் சின்னம் இல்லாமல் ஆறு வேட்பாளருடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்கிய அரை மணி நேரம் கழித்தே சின்னம் இல்லாததை அறிந்த வேட்பாளர் நிஜாமுதீன் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து தேர்தல் அலுவலருக்கு தகவல் சொல்லி 7 சின்னங்கள் கொண்ட வாக்குச்சீட்டுக்கள் கொண்டு வரப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் 15-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகிவிட்டன.
அதன்பின்னர் வந்த வாக்காளர்கள் 7 வேட்பாளர்களின் சின்னங்களும் கொண்ட வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி வாகளித்தனர்.
அதேபோல், திண்டுக்கல் அருகே கொட்டபட்டி ஊராட்சியில் சரியாக சின்னம் தெரியவில்லை என ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காலை 9 மணி நிலவரப்பட்டி திண்டுக்கல்லில் 5.64% வாக்குப்பதிவாகியுள்ளது.