ஊட்டி: ஊட்டியில் சீசன் துவங்கிய நிலையில் ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏப்ரல் மே ஆகிய கோடைக் காலங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல் அறைகளுக்கான கட்டணங்கள், தற்போது உயர்ந்து வருகின்றன.
முதல் சீசன், இரண்டாம் சீசன் மற்றும் சாதாரண சீசன் என மூன்று வகையாக பிரித்து உயர்த்துகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களும் அனுமதிக்கின்றன.
தற்போதைய சீஸன் கால கட்டணம் சாதாரண நாட்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக வசூலிக்கப்படும். ஆனால், ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ் மற்றும் லாட்ஜ்களில் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த மாதம் அறை ஒன்றுக்கு ரூ.600 முதல் 800 வரை வாங்கிய விடுதிகளில் தற்போது ஆயிரத்திற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கமிஷனுக்காக, சில சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் காட்டேஜ்களுக்கு அழைத்துச் சென்று அறைகளை எடுத்துத் தருகின்றனர். இதில், காட்டேஜ் மற்றும் வாடகை வீடு எடுத்துக் கொடுப்பவர்களுக்கு ‘கமிஷன்’ என சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அறைகளின் கட்டணத்தைக் கேட்டவுடன் தங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.
சில இடங்களை மட்டும் சுற்றிப் பார்த்து விட்டு இரவோடு இரவாக வேறு பகுதிக்கும், அண்டை மாநிலமான கர்நாடகம் மைசூர் மற்றும் கேரள மாநிலத்திற்குச் சென்று விடுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊட்டியில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் கட்டணத்தை முறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதனை கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணத்தை முறைப்படுத்த வழி செய்யவில்லையெனில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும், பலரும் வந்தவுடன் திரும்பி விடுவதால் ஊட்டி வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.