அமெரிக்காவின் சிகாகோ நகர விமானநிலையத்தில் ஏற்படவிருந்த பேராபத்தை உரிய நேரத்தில் உள்ளே புகுந்து தவிர்த்த விமான நிலையப் பணியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்கவின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையத்தில் வழக்கம்போல விமான சேவைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த விமான நிலையத்தின் டார்மாக் – நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தின் அருகே குளிர்பானங்கள் கொண்டு செல்லும் ஒரு வாகனம் நின்றது.
அந்த வாகனத்தின் டிரைவர் என்ஜினை இயங்கும் நிலையிலேயே விட்டுச் சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக டிரைவர் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் கொண்ட பெட்டி அவ்வாகனத்தின் ‘ஆக்ஸிலேட்டர்’ மீது சரிந்தது. இதனால் வாகனத்தில் ஆக்சிலேட்டரில் அழுத்தம் ஏற்பட்டு, வாகனம் தானாக இயங்கத் தொடங்கியது. வாகனத்தின் ஸ்டியரிங் திருப்பப் பட்டிருந்த நிலையில் ஆக்சிலேட்டர் மட்டும் இயங்கியதால், வாகனம் சுழன்றபடி பின்னோக்கி ஓடத் தொடங்கியது. குறிப்பாக, அருகே விமானம் நின்றிருந்த நிலையில், படுவேகமாக குரங்காட்டம் ஆடிய வாகனத்தின் நிலை கண்டு செய்வதறியாமல் பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக ஓடி வந்த ஒரு விமான நிலைய பணியாளர் தனது அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தை வேகமாக இயக்கி, தன்னிச்சையாக சுழன்று கொண்டு வட்டம் அடித்துக் கொண்டிருந்த குளிர்பானங்கள் நிரம்பிய வாகனத்தின் நடுவே படு லாகவமாக முன் சக்கரத்துக்கும் பின் சக்கரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நிறுத்தினார். இதனால் ஓடிக் கொண்டிருந்த வாகனம் தடை ஏற்பட்டு, நின்று சரிந்தது.
வாகனத்தை நிறுத்திய அவரது சமயோசித அறிவை விமான நிலைய பணியாளர்களும் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினர். இந்தக் காட்சிகளை சற்று தொலைவில் விமானம் ஏறக் காத்திருந்த ஒரு பயணி தனது செல்போனில் விடீயோவாக படம் பிடித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த விடீயோ செய்தி ஊடகங்கள் வாயிலாக வைரலாகப் பரவியது.
இதை அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘சரியான நேரத்தில் செய்யப்பட்ட நல்ல காரியம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.