காமராஜர் இருந்த இடத்தில் கழிசடை இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் சீண்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வரும் நெட்டிசன்கள், என்ன செய்வது ஸ்டாலின்..?! காமராஜர் இருந்த இடத்தில் தான் கழிசடை கருணாநிதியும் அமர்ந்திருந்தார்… அது தமிழர்கள் செய்த தவறுதானே! என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ” காமராஜரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது நமக்கு பெருமை. காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வது பெருமை அல்ல எனது உரிமை. நாட்டிற்கு பல பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர். இக்கட்டான சூழ்நிலைகளின் போது தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த தந்தை பெரியாரை, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வைத்தவர் காமராஜர்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது தான், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் திருவெறும்பூர் பெல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. காமராஜர் மறைந்தபோது காங்கிரஸ் மைதானத்தில் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தலைவர் கலைஞர் தான் காந்தி மண்டபம் அருகே காமராஜருக்கு நினைவிடம் அமைக்க வித்திட்டார்.
என்னுடைய திருமண சமயத்தில் காமராஜருக்கு உடல் நலம் குன்றியிருந்தது. திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு கலைஞர் காமராஜரை பார்க்கச் சென்றார். திருமணவிழாவில் நீங்கள் பங்கேற்கவில்லை என்றாலும் நான் மணமக்களை அழைத்து வருகிறேன் என்று காமராஜரிடம் கலைஞர் கூறினார். ஆனால் காமராஜர் சொன்னார் இல்லை நான் வருகிறேன் என்றார்.
அவர் திருமண மேடை வரை காரில் வருவதற்கு ஏற்பாடு செய்தோம். இதற்காக திருமண மண்டபத்தையே மாற்றினோம். அங்கு வந்து அவர் என்னை வாழ்த்தினார். காமராஜர் வாழ்த்திய ஸ்டாலின் தற்போது திமுக தலைவராக உள்ளேன்.
காமராஜர் கட்சி தலைவராக மட்டுமல்ல ஒரு இனத்தின் தலைவர். அவர் ஒரு கிங் மேக்கர். காமராஜர் கல்விக் கண் திறந்தவர். இக்கட்டான சூழலில் கலைஞருக்கு ஆலோசனைகள் வழங்கியவர் காமராஜர்.
காமராஜர் இருந்த இடத்தில் கழிசடைகள் அமர்ந்திருப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது. காமராஜர் முதல்வராக இருந்த சமயத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக சென்று பார்வையிட்டார். ஆனால், கஜா, ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதல்வர் பழனிசாமி சென்று பார்வையிடவில்லை. அதே போல் நீலகிரி பகுதிக்கும் செல்லவில்லை. நான் நீலகிரிக்கு சென்று இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டேன்.
அதற்கு முதல்வர் பழனிசாமி நான் விளம்பரம் தேடுவதாக பேசுகிறார். ஆனால், மக்களுக்கு தெரியும் யார் எப்படி என்று. நான் கிராமங்களுக்கு சென்றால் அனைவருக்கும் தெரியும். முதல்வர் பழனிசாமி பாதுகாப்பின்றி தனியாக சென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. யாராவது முதல்வர் வந்துள்ளார் என்று சொன்னால் தான் அவரை பற்றி தெரியும்.
இன்றைக்கு ஒரு அடிமையாட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி நடத்தக் கூடியவர்கள் டெல்லிக்கு சென்று வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார்கள்.
காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என கலைஞர் அறிவித்தார். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அதனை முறையாக தொடரவில்லை. ” என உரையாற்றினார்.
காமராஜர் இருந்த இடத்தில் கழிசடைகள் உள்ளது வருத்தமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை சாடி, கழிசடைகள் என ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட லாயக்கற்ற, முதிர்ச்சியற்ற ஒருவராக மு.க.ஸ்டாலின் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
முதலமைச்சராக இருக்கும் ஒருவரை கழிசடை என ஸ்டாலின் விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், கருணாநிதியே கழிசடைதானே என்று அவரே மறைமுகமாக சொன்னது போல் ஆகியுள்ளது. லூஸ் டாக் ஸ்டாலின் என்று அவர் மீது இப்போது விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
கருணாநிதியும் காமராஜரும் நட்புடன் இருந்தார்கள் என்று ஒரு கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார் ஸ்டாலின் என்றும், காமராஜரை அண்டங்காக்கா என்று விமர்சித்து, அவரை சாதி ரீதியாகவும் கேவலமாகப் பேசித் தள்ளியவர் கருணாநிதி என்றும் ஸ்டாலினின் பொய் மூட்டைகளை வரலாற்றுத் தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் முன் வைத்து வருகின்றனர்.
மேலும், காமராஜர் சமாதிக்கு அப்போது கடற்கரையில் இடம் கேட்டதாகவும், கருணாநிதியே சதி செய்து அவருக்கு கடற்கரை ஒதுக்க முடியாது என்று கூறி காந்தி மண்டபத்தை இறுதி சடங்குகளுக்கு மாற்றினார் என்றும், அந்த வரலாற்றை திரித்து ஏதோ சாதனை செய்தது போல் பேசி வருவது திமுக.,வின் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்றும் கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் திருமண விவகாரத்திலும் ஸ்டாலின் தவறான தகவல் கொடுத்திருப்பதாகக் கூறுகின்றனர். காமராஜர் காலமானது 1975ம் வருடம் அக்டோபர் 2ம் நாள். ஸ்டாலினின் திருமணம் நடந்தது அதே வருடம் அக்டோபர் 20ம் நாள்.. என்கிறது குறிப்புகள்!