நாட்டின் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்தவன் நான். பிற மொழி ஒன்று கற்க வேண்டுமானால் இந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்; பொது மொழி பற்றிய எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்தியைத் திணிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் அதற்கு பதிலளித்த அமித் ஷா, மொழி அரசியலில் ஈடுபடுவோரை வன்மையாகக் கண்டித்ததுடன், தாம் கூறியதைத் தவறாக பிரசாரம் செய்வதாகவும் கூறியுள்ளார்.
அமித் ஷா நாட்டிற்கு பொதுவான மொழியைக் கோருவதாகவும், இந்தியின் பெயரை பொதுவான மொழி என முன்மொழிந்ததாகவும் ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் இருந்து குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அமித் ஷாவின் இந்தக் கருத்தை கண்டிப்பதாக பலரும் கூற, இன்று ரஜினிகாந்த்தும் அது குறித்து விமர்சித்தார்! ஒரு பொதுவான மொழியை இந்தியாவில் செயல்படுத்த முடியாது என்று கூறினார் ரஜினிகாந்த்.
மொழிப் பிரச்னை நாட்டு மக்களை உசுப்பேற்றிய பரபரப்புக்கு இடையே அமித் ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வழியாக ஒரு விளக்கத்தை வெளியிட்டார்,
தாம் ஒருபோதும் மற்ற பிராந்திய மொழிகளுக்கு பதிலாக இந்தி திணிப்பை மேற்கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்றும், ஒருவரின் தாய்மொழிக்குப் பிறகு இந்தியை இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்றும் கூறியதாக விளக்கியுள்ளார்.
தாமும் குஜராத்தில் இருந்து வந்தவரே என்றும், இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலம் குஜராத் என்றும், இந்தப் பிரச்னையில் மக்கள் வலுக்கட்டாயமாக அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.