திருமண மண்டபங்களில் விளையாடித்திரியும் குழந்தைகளை குறி வைத்து நகை திருடும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். காவலரின் மகளிடமே கைவரிசை காட்டிய திருடனை கைது செய்து 16 பவுனை பறிமுதல் செய்தனர்.
சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் சசிகுமார். கடந்த 1ம் தேதி வடபழனியில் வள்ளி திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த காவலரின் மகளின் கழுத்தில் இருந்த 4 சவரன் நகையைக் காணவில்லை.
இது குறித்து சசிகுமார் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் வீடியோ பதிவையும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த தலைமைக்காவலர் மகளின் கழுத்திலிருந்து நகையை திருடுவது அதில் பதிவாகி இருந்தது.
அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வேலூருக்கு சென்ற தனிப்படை காவலர், புருஷோத்தமன் கூடுவாஞ்சேரியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து அவரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர் திருமண மண்டபங்களில் குழந்தைகளின் கழுத்தில் கிடக்கும் நகைகளை திருடுவதை வழக்காக கொண்டுள்ளதும், அவர் மீது 7 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 16 சவரன் நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட புருஷோத்தமனை விசாரணைக்குப் பின்னர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.