மூத்த நடிகை கீதாஞ்சலி வியாழக்கிழமை இன்று ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழித் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயர் வாங்கியவர் கீதாஞ்சலி.
என்டிஆர் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த சீதாராமுல கல்யாணம் படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆனார். அனைத்து மொழிகளிலுமாக 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் கீதாஞ்சலி.
கலவாரி கோடலு, டாக்டர் சக்கரவர்த்தி, லேத மனசுலு, இல்லாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தெய்வத்தின் தெய்வம், வாழ்க்கைப் படகு, தாயின் மடியில் ,அதே கண்கள்,என் அண்ணன், அன்னமிட்ட கை ஆகியவை அவரது முக்கியமான படங்கள்.
கீதாஞ்சலி, கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் ஸ்ரீராமமூர்த்தி, சியாம சுந்தரி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். காகிநாடாவில் செயின்ட் ஜோசப் கான்வென்டில் படித்தார்.
5 வயதிலிருந்தே கீதாஞ்சலி தன் சகோதரி சுவர்ணாவோடு சேர்ந்து கந்தர்வ நாட்யமண்டலியில் சேர்ந்து லட்சுமண ரெட்டி, சீனிவாசன் உள்ளிட்ட சிலரிடம் நாட்டியம் கற்றார். ஆறாவது வயதில் இருந்தே நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார்.
இவருடைய இயற்பெயர் மணி. 1963இல் பாரஸ்மணி என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும்போது அந்தப் படத் தயாரிப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் சினிமா டைட்டிலில் மணி இருப்பதால் இவருக்கு கீதாஞ்சலி என்று பெயர் வைத்தனர். அதே பெயர் திரைத்துறையில் இவருக்கு நிலைத்து விட்டது.
சக நடிகர் ராமகிருஷ்ணாவை திருமணம் புரிந்த பின் நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்தார். சிறந்த குணசித்திர நடிகையாக மாறிய கீதாஞ்சலி திருமணமானபின் மாயாஜாலம் , பாய், க்ரீகு வீருடு போன்ற படங்களில் நடித்தார். கீதாஞ்சலியின் கடைசிப் படம், நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்த ‘தட் ஈஸ் மகாலட்சுமி’.
அரசியலில் நுழைந்த கீதாஞ்சலி 2009இல் ஆந்திரப் பிரதேச தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். என்டிஆரை தன் திரை குருவாக குறிப்பிடுவது வழக்கம் .
சீதாரமுல கல்யாணம் படத்தில் ஹீரோயினாக தன்னைத் தேர்ந்தெடுத்து சீதா பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தினார் என்று நெகிழ்ச்சியோடு கூறுவது வழக்கம்.