அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா இ இந்த் என்ற அமைப்பு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அது போல், அகில இந்திய இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியமும், சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரியதாக இருந்த அயோத்தி நில வழக்கில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில் சர்ச்சைக்குரியதான வகையில் முன்று அமைப்புகள் உரிமை கோரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ராம் லல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அந்த இடத்திற்கு பதிலாக இஸ்லாமிய அமைப்புகள் மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் ஒரு மனுதாரரான சுன்னி வக்ஃபு வாரியம் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.
அதே நேரம், அயோத்தி வழக்கில் இன்னொரு மனுதாரரான மௌலானா சையது அஷாத் ரஷிதீ, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். ஜாமியாத் உலாமா இந்த் அமைப்பின் தலைவரான இவர், சீராய்வு மனுத் தாக்கல் செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் தங்களுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்தார். இறுதித் தீர்ப்பு தங்களுக்கு எதிராக அமைந்திருப்பதால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்ததாக அவர் கூறினார்.