சொந்த ஊருக்கு போவதற்காக சடலம் போல் வேடமிட்டு சென்றவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
லாக் டவுன் காரணமாக மக்களில் சிலர் மிகவும் சிரமப் படுகிறார்கள். சம்பளமின்றி வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்கிறார்கள். சிலர் கால் தேயும்படி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து செல்கிறார்கள். இன்னும் சிலர் மூளைக்கு வேலை கொடுத்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.
சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஒருவர் ஒரேடியாக விபரீத ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். ஒருவர் சவம் வேடமிட்டு சென்று, உடன் வந்தவர்களையும் சேர்த்து போலீசார் கையில் சிக்க வைத்தார்.
இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மூன்று பேர் திட்டம் தீட்டி உள்ளார்கள். அவர்களில் ஒருவர் இறந்து போனதாக டெத் சர்டிபிகேட் கூட வாங்கிவிட்டார்.
கிராமத்திற்குப் போவதற்கு ஆம்புலன்சை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். போலீசாருக்கு சந்தேகம் வராதபடி அந்த மூவரில் ஒருவர் மரணித்தது போல் படுத்துக்கொண்டு நடித்தார்.
அந்தப் பிணத்தை தம் கிராமத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறோம் என்று செக்போஸ்ட் அருகில் போலீசாருக்கு கூறினார்கள். ஆனால் சூரன் கோட் செக் போஸ்ட்டுக்கு சென்ற போது, போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் ஆம்புலன்சை சோதனை செய்துள்ளனர். அதில் சவம் போல் படுத்து இருந்த மனிதருக்கு டெம்பரேச்சர் பார்த்துள்ளனர்.
அப்போது அந்த நபர் உயிரோடு இருப்பதாகத் தெரிந்து கொண்டார்கள். அதனால் அந்த மூன்று பேருடன் கூட டிரைவரையும் இன்னும் ஒருவரையும் கைது செய்தார்கள்.
அவர்கள் மீது, செக்சன் 420 (ஏமாற்றுதல்), 269 (உயிருக்கு ஆபத்தான வியாதி நோய் பரப்பும் அலட்சிய போக்கு), மற்றும் 188 (அரசாங்க சேவைகளை தடை செய்வது) போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.