அஜித் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த நபர்கள் எங்கள் பகுதியில் துப்புகிறார்கள் என்று புகார் அளித்த சில நொடிகளில் மும்பை போலீஸார் உடனே அந்தப் பகுதிக்கு போலீஸாரை அனுப்பி வைக்கிறோம் என்று பதில் அளித்து, அதிரடி ஆக்சனில் இறங்கினர்.
நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் பரவி வருகிறது. ஒருவரின் சளி, இருமல், எச்சில் இதன் மூலம் பரவும் வைரஸ் என்பதால், சுற்றுப் புற சுகாதாரத்துக்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சாலை ஓரங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து, மக்கள் புழங்கும் இடங்களை நோய்த் தொற்று இல்லாமல் பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால், பொதுமக்களில் சிலரோ சுகாதார எண்ணம் சிறிதுமின்றி, சாலையோரத்தில் துப்புதல், வேண்டுமென்றே எச்சிலை அங்கங்கே தடவிச் செல்லுதல் என்று, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் சந்தன்சர் விரார் கிழக்கு பகுதியில் தண்டுல் பசாரில் இளைஞர்கள் சிலர் புகையிலையை மென்று சாலை ஓரத்தில் துப்புகிறார்கள், அந்த மக்களிடம் ஒழுங்கு இல்லை, தயவுசெய்து போலீஸாரை அனுப்பி உதவுங்கள் என்று ஒருவர் வீடியோ பதிவு செய்து, மும்பை போலீசின் டிவிட்டர் பதிவில் புகாராக பதிவு செய்தார்.
இதை பார்த்த போலீசார், உங்களது புகாரை பல்ஹார் போலீஸுக்கு பார்வர்ட் செய்திருக்கிறோம். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அவர்களை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று தொலைபேசி எண்களையும் டிவிட்டரிலேயே அளித்துள்ளனர்.
அண்மைக் காலங்களில் போலீஸார் பகுதி வாரியாக டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அதில் எவராவது பொது நலன் விரும்பி புகார் பதிவு செய்தால் கூட, (புகாருக்கு உள்ளாகும் நபர்கள் ‘மர்ம’ நபர்களாக இல்லாத பட்சத்தில்) அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது டிஜிட்டல் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாற்றம்.