இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு புறமிருக்க, பீகாரில் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
பீகாரின் கயா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் மார்ச் 25-ம் தேதி பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்திலிருந்து தனது கணவரின் தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். 2 மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் கயா மாவட்டத்துக்குப் புறப்படுவதற்கு முன் கருக்கலைப்பு செய்துள்ளார்.
இந்நிலையில், கயாவில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்கு வந்த நிலையில் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள அனுராக் நரைன் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தப் பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1-ம் தேதி அன்று கொரோனா தனிமைப்படுத்தும் வார்டில் மருத்துவமனை நிர்வாகம் அவரை தனிமைப்படுத்தியுள்ளது.
அடுத்த சில நாள்களில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில், கொரோனா வைரஸின் தொற்று அவருக்கு ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால், அந்தப் பெண் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 6-ம் தேதி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் மாமியாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு யாருடனும் சரியாகப் பேசாமல் அதிக பயத்துடன் இருந்தார்.
இது குறித்து மருமகளிடம் விசாரித்த போது, தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வார்டில் மருத்துவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்’ என்றார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்துக்கொண்டு, அந்தப் பெண்ணின் மாமியாரைக் காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர். இருப்பினும், அவர்களால் குற்றவாளியைச் சரியாக அடையாளம் காட்ட இயலவில்லை.
மேலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டினுள் நுழைந்ததாக இருவர் கயா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில், ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மருத்துவர் உடையிலும் மருத்துவ கிட்களுடனும் ஐசோலேஷன் வார்டுக்குள் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.